Tuesday, March 12, 2024

கொடுப்பதில்தான் சந்தோஷம் - நீதிக்கதை

ஒருவர் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். வீட்டிற்காக சில பொருள்களை வாங்க வேண்டுமென்று வந்தார். 


அவர் ஒரு கடையில், ஒரு பொருளை வாங்குவதற்காக, பணப்பையை எடுக்க நினைத்த போது, பணப்பையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தும் பணப்பை கிடைக்கவில்லை. 


ஆகையால் எதுவும் வாங்காமலே வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.


பணத்தை இழந்த வருத்தம் அவருக்கு இருந்தது. வெகுநேரம் அதைப்பற்றியே நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். நாளடைவில் அந் நிகழ்ச்சியை அவர் மறந்து போனார். ஆனாலும்


வெளியில் செல்லும் போது, எடுத்துக் கொண்டு போகும் பணத்தில் கவனமாக இருக்கலானார்.


மற்றொருநாள் நூறு ரூபாயை பையில் வைத்துக்கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார்.


வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் வாங்கினார். ஐம்பது ரூபாய் மீதம் இருந்தது.


குழந்தைகளுக்காக இனிப்பு வகை ஏதாவது வாங்கலாம் என்று எண்ணினார். இனிப்பகத்தை நோக்கிச் செல்லும்போது ஒரு பெண்மணி கையில் பிள்ளையைப் பிடித்தபடி வந்தாள்.


"ஐயா, என் ஒரே மகன் இவன். பள்ளியில் படிக்கிறான். புத்தகம் வாங்க வேண்டும். கையிலோ காசில்லை. நீங்கள் கொடுத்து உதவினால் புண்ணியம் உண்டு” என்று கெஞ்சினாள்.


படிக்கும் பிள்ளைக்கு புத்தகம் வாங்கப் பணம் கொடுப்பது நல்ல செயல்தானே என்று எண்ணியவர் தம்மிடம் இருந்த ஐம்பது ரூபாயை அந்தப் பெண்மணிக்கு அளித்து விட்டார். வீடு நோக்கி வந்து கொண்டிருந்த அவருடைய மனத்தில் சந்தோஷம் பொங்கியது. தம்மால் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்ததே என்ற சந்தோஷம்.


வீட்டிற்கு வந்ததும். தம்முடைய சந்தோஷத்தை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


பணப்பை தொலைந்து போன போது இழந்ததும் ஐம்பது ரூபாய்தான். இப்போது கொடுத்ததும் ஐம்பது ரூபாய்தான். ஆனால் தொலைந்து போன போது இழந்த வருத்தம், இப்போது இல்லை.


"எதுவும் தாமாகவே சென்று விட்டால் அதனால் துன்பமே ஏற்படுகிறது. நாமே அறிந்து அதனைக் கொடுக்கும் பொழுதோ அதனால் சந்தோஷமே ஏற்படுகிறது."


என்ற நீதியை புரிந்துகொண்டார்.

No comments:

Post a Comment