Saturday, March 16, 2024

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

 

திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இது மிக பழமையான கோவில்களில் ஒன்று. அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார்.


🙏கோயில் சிறப்பு :


எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கௌரி விரதத்தையும் ஒன்றாக கடைபிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இதுதான்.


இங்குள்ள முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீதமர்ந்து காட்சி தருகிறார்.


வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார்.


பக்தர்கள் தங்கள் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.


குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் காட்சி தருவார்.


கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகிவிடும் என்பது சிறப்புடையது.


எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.


எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.


இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தணிக்கும் வகையில் தினந்தோறும் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.


🙏கோயில் திருவிழா :


சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பௌர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் விழா நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு. இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள்.


🙏பிரார்த்தனை :


குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


🙏நேர்த்திக்கடன் :


சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

No comments:

Post a Comment