Monday, March 4, 2024

அருமருந்தாகும் கஞ்சி உணவுகள்

நோய்நாடி நோய்முதல் நாடி 

இன்றைய தலைமுறைக்கு காலை நேரம் என்பது அவசர தருணமாகவே இருக்கிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம்... என உணவைக்கூட நின்று நிதானமாகச் சாப்பிட முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள், கடைக்கோடிவரை கடைவிரித்துவிட்டன. ‘இரண்டே நிமிடங்களில் தயாராகும் நூடுல்ஸ்... எக்ஸ்ட்ரா எனர்ஜி தரும் சத்துமாவு... உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ், பார்லி... விதவிதமான ஜாம், பிரெட்...’ எனப் புதுப்புது ரெடிமேடு உணவுகளைக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி, நம் தலையில் கட்டுகின்றன.

பாட்டில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்த ரெடிமேடு உணவுகளை, விளம்பர மோகத்தால் பலரும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இந்த உணவுகளால் முழுமையான சத்து கிடைக்கிறதா, அவற்றை உண்பவர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று பார்த்தால், `நிச்சயமாக இல்லை’ என்றே பதில் வரும். இளம் வயதினர் அதிகம் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளே அதற்கு சாட்சி.

காலை உணவாகக் கஞ்சி

நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி தருவது உணவு. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவை அவசியம். இவை அனைத்தும் இருந்தால்தான், ஒரு நாள் முழுமைக்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைக்கும். இல்லையென்றால், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வு, மந்தம் நம்மைப் பற்றிக்கொள்ளும். தவிர, நோய்களும் உடலை வதைக்கத் தொடங்கும். இவற்றை நன்கு உணர்ந்திருந்த நம் முன்னோர் காலை உணவில் சரிவிகிதச் சத்துகள் இருக்குமாறு அமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறு தானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.


‘காலை உணவு கஞ்சி மட்டுமே’ என்பது நம் வழக்கில் இருந்த சொல்லாடல். அதிகாலையில் வேலைக்குச் செல்லும்போது தவறாமல் கஞ்சி, களி போன்ற உணவுகளைத் தூக்குச்சட்டியில் சுமந்து சென்ற முந்தைய தலைமுறை மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்தது. முக்கியமாக கம்பு, சாமை, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கஞ்சி, கூழ் போன்றவையே அன்றைய காலை உணவாக இருந்தன. ஆனால், நவீன வாழ்க்கை, கஞ்சியெல்லாம் ஏழைகள் மற்றும் உடலுழைப்புள்ள தொழிலாளர்கள் உண்ண வேண்டிய உணவு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இன்றைக்குக் கஞ்சி என்பது ஏழைகளின் உணவுப் பட்டியலிலும்கூட இல்லை என்பது துரதிர்ஷ்டம்.

அருமருந்தாகும் கஞ்சி உணவுகள்

பொதுவாக, நம் பாரம்பர்ய திரவ உணவான கஞ்சியைக் குறைவாக எடுத்துக்கொண்டாலும், அதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான சத்துகளும், உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலும் நிறைவாகக் கிடைக்கும். முக்கியமாக, கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம். அத்துடன் ஒவ்வொரு வகைக் கஞ்சிக்கும் வெவ்வேறு பலன்கள் கிடைக்கும்.


உதாரணமாக, நெல்லைப் பொரித்து, உமியை நீக்கிய பிறகு தயாரிக்கப்படும் நெல்பொரிக் கஞ்சி வயிற்றுப்போக்கு, வயிற்றுவலியைப் போக்கும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிறுபயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சமுட்டிக் கஞ்சி உடலுக்கு ஊட்டம் தரும். மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கும், நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு. உளுத்தம்பருப்பால் செய்யப்படும் கஞ்சியில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும் வைட்டமின்களும் அதிகளவில் உள்ளன. இவை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளை நிவர்த்தி செய்யும்.


அரிசியுடன் கொள்ளு சேர்த்துத் தயாரிக்கப்படும் கொள்ளுக் கஞ்சி, கப நோயாளிகளுக்கு ஏற்றது. அது மட்டுமல்லாமல் பசியின்மை, மந்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் சீரகம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்த்துக் குடிக்கலாம். நோயுற்ற காலங்களில் சாப்பிடலாம். குறிப்பாக, காய்ச்சலின்போது  அரிசிக்கஞ்சி சாப்பிடுவது உடலில் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட உதவும். வறுத்த அரிசியில் செய்யப்படும் கஞ்சி சுவையாக இருக்கும். இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment