Saturday, June 1, 2024

பள்ளி என்பது

 சமுதாய நலனில் அக்கறை கொண்டோர் முழுவதும் படிக்கவும்:


பள்ளி என்பது மாணவன் பண்படுத்த உரிய சூழலை உருவாக்குமிடம்.


கூடி வாழ்தல்,

விட்டுக்கொடுத்தல், 

உதவுதல்,

மனிதம் புரிதல்,

வேற்றுமையைக் களைதல்,

ஒற்றுமையை உருவாக்குதல்,

ஒழுக்கத்தைப் பேணல்,

கீழ்படிதலைக் கற்றல்,

நாட்டுப்பற்றை உணர்தல்,

தியாகத்தை அறிதல்,

கடமையை உணர்ந்து,

கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக வாழ அறிதல்,

பெரியவர்களை மதித்தல்,

பெரியோர் சொல் கேளல்,

சபை நாகரிகம் அறிதல்,

அறியாதன அறிதல்,

புரியாதன புரிதல்,

தெரியாதன தெளிதல்,

சூட்சமங்களை உணர்தல்,

பலவகை அனுபவம் பெறல்,

ஒற்றுமையின் வலிமை அறிதல்,

தீயவை பேசாமை, கேளாமை, பார்க்காமை நன்று என தெளிதல்,

அன்பு, பாசம், பரிவு, நேசம், . . . புரிதல்,

மற்றவர் வலி உணர்தல்,

சுதந்திரத்தை உணர்ந்தல்,

அறிவைப் பெருக்குதல், . . .

என சகலத்தையும் கற்றல் நடைபெறும் இடமே பள்ளி.

அவை செவ்வனே நடைபெற

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்பு மிக அவசியம்.


மாணவன் தவறு செய்தால் 

கண்டிக்கக் கூடாது, 

திட்டவும் கூடாது, 

மனம் புண்படும்படி 

பேசவும் கூடாது,

எனில்...


படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, 

கட்டாயப்படுத்தக் கூடாது,

ஒழுக்கத்தை வலியுறுத்திக் கூறக் கூடாது, 

இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, 

மாணவன் மனம் புண்படுமாறு நடக்கக்கூடாது

எனில் 

ஆசிரியரின் ( பெற்றோரின் ) வேலை தான் என்ன...?


கற்களை செதுக்கக் கூடாது என்று சொன்னால் சிற்பங்கள் உருவாகுமா?


நிலங்களை பண்படுத்தக் கூடாது என்று சொன்னால் இங்கு விளைச்சல்  கிடைக்குமா?


தங்கத்தை நெருப்பில் இடாமல், தட்டாமல், உருக்காமல் தங்க ஆபரணங்கள் கிடைக்குமா?


பண்படுத்துவது என்பது, புண்படுத்துவது அல்ல

நெறிப்படுத்துவது

என்ற புரிதல்

மாணவர்களுக்கு மட்டுமல்ல, ம(பெ)ற்றவர்களுக்கும் வேண்டும்.


ஒரு குழந்தைக்கு

மருத்துவர் ஊசி போட்டால்,

வலிக்கும் என்று அவரிடம் 

சொன்னால் குழந்தையின்

நோய் குணமாகுமா?


ஒரு குழந்தையின் கைகளையும், கால்களையும்,  தலையையும் அசையாமல் அழுத்தி பிடித்து, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தரும் செயல் குழந்தையின் மீது செலுத்தப்படும்  மோசமான வன்முறை. அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் பேசினால் குழந்தை நிலை என்னாகும்?


பேசுபவர் பெறப்போவது ஒன்றிமில்லை, சம்பந்தப்பட்டவர் இழப்பு அதிகம்.

புரிந்தவர் பேச வேண்டும்.

இல்லையெனில் உண்மை உறங்கிவிடும்.


உடல் நலனுக்காக 

இயங்கும் மருத்துவத்துறையின் கைகள் கட்டப்பட்டால், 

உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...


புரிதல் வேண்டும்...


அதே போல...

பள்ளியில் ஆசிரியர்கள் 

கட்டுப்படுத்தப்பட்டால்

விளைவுகள் நல்லதாக இருக்காது. 


ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால் (செயலிழந்தால்)

அது பல சிறைச்சாலைகள் உருவாக வழிவகுக்கும்.


ஆசிரியரின் செயலும்,

உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...

மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால்,

நல்வழிநடத்தப்படாவிட்டால்

ஒழுக்கமற்ற சமுதாயம் உருவாகும்.


சிந்தியுங்கள் (உ)பெற்றோர்களே..….! 


மனம் நொந்து போயுள்ள நல்ஆசிரிய சமுதாயம் சார்பாக குரல்கொடுங்கள்.


குரு நிந்தனை

சமுதாயச் சீர்கேடு.

அல்லோருக்காக 

நல்லோரை காயப்படுத்தாதீர்கள்.


களை எடுக்கப்பட வேண்டும்.

அதற்காக வயலையே நாசம் செய்யக்கூடாது.


அரிசியில் உள்ள கலப்படத்தை நீக்க வேண்டுமேயன்றி

மொத்தத்தையும் குப்பையென எண்ணக்கூடாது.


வகுப்பறை என்பது 

மாணவர்களின் முழு வளர்ச்சி இயல்பாக நடைபெறவேண்டிய இடம்.

அதை நிகழ்த்த ஆசிரியருக்கு முழு சுதந்திரம் வேண்டும்.

கல்வித்துறையும், 

சமூகநலத்துறையும்,

பொதுமக்களும் அத்தைகைய சூழலை,

பாதுகாப்பான சூழலை,

சுதந்திரமான சூழலை உருவாக்க உதவிட வேண்டும்.

அத்தகைய சூழலுக்கு

தடைகள் ஏற்படும் எனில் சமுதாய சீர்கேடுகள் அதிகமாகும்.


அறிவார்ந்த சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்டு பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கும், மாணவர்களை தன் பிள்ளைகள் போல் நினைத்து கற்பிப்பிக்கும், மாணவர்களை சிறந்த முறையில் வழிநடத்தி, அவர்களை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொரு ஆசிரிய / ஆசிரியைகளுக்கும் வாழ்த்துகள்,

 பாராட்டுகள் தெரிவிக்க மனமில்லையென்றாலும்,

பொதுவாக அனைவரையும் தூற்றாதீர்கள். 


நாமும், 

நம்மைச் சார்ந்தவரும்,

நம் அருகில் இருப்பவர் உயர்வுக்கும் 

காரணமான

ஆசிரியர்களைச் சற்று எண்ணிப்பாருங்கள்.

உண்மையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்போதும் ஏணியாகத்தான் இருப்பார்கள்.

பெற்றோர்களே, பொதுமக்களே சிந்தியுங்கள்!!

அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து நல்லதோர் உலகம் செய்திட வாருங்கள்!!

வாருங்கள் வடம் பிடிப்போம்!

வரலாற்றில் இடம் பிடிப்போம் !!


*ஆக்கம்*

*எஸ்.கே.ஆர்.செங்குட்டுவன்*

*பட்டதாரி ஆசிரியர்*

*தகட்டூர்.*

No comments:

Post a Comment