Sunday, June 9, 2024

மனத்தை அங்காடி நாய் என்கிறார் பட்டினத்தார்

 *இன்றைய சிந்தனை: மனம்*

கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப் போல் மனமும் ஓடுகிறது என்றார்.


மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் மனம்தானே! 


பேயாய் உழலும் சிறு மனமே என்கி

றார் பாரதியார். 


மனதின் ஊசலாட்டத்தை பற்றி அவரும் கவலை கொள்கிறார். 


பயப்படக்கூடிய விஷயங்களில் சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது.


துணிய வேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.


காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது.


நடந்து போன காலங்களுக்காக அழுகிறது.


நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. 


அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. 


அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும் போது சக்தி என்று போய்விடுகிறது.


பசுமையை கண்டு மயங்குகிறது! வறட்சியை கண்டு குமுறுகிறது! உறவினருக்காக கலங்குகிறது! 

ஒரு கட்டத்தில் மரத்துப் போய் விடுகிறது!

ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது!

ஆசாபாசங்களில் அலை மோதுகிறது!

விரக்தி அடைந்த நிலையில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ளும் வலிமையை தன் கைகளுக்கு கொடுத்து விடுகிறது. 


கொலை ,திருட்டு ,பொய் ,இரக்கம், கருணை , பாசம் எல்லாவற்றுக்கும் மனமே காரணம்.


மனத்தின் இயக்கமே மனித இயக்கம்.


எதிலும்  துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்?


எல்லாம் மாயையே என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும். 


கீதையில் கண்ணன் கூறுகிறான் "என்னை பரம் எனக் கொள்க. வேறொன்றில் பற்றையழித்து என்னை தியானித்து வழிபடுக. 

இறப்பும் பிறப்பும் ஆகிய கடலில் இருந்து உன்னை நான் கை தூக்கி விடுவேன்"


நல்லது அப்படியே செய்து பார்ப்போம்.

ஆனாலும் முடியவில்லை. 


நெருப்புக்கு தப்புகிறோம்.

நீரில் மூழ்குகிறோம்.


நாய்க்கு தப்புகிறோம். 

நரியின் வாயில் விழுகிறோம். 


ஒன்றை மறந்தால் இன்னொன்று வருகிறது.


புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலை போட போய் வெற்றிலை போட்டுக் கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவது போல் மறக்க முயன்றவற்றை மறக்க முடியாமல் புதிய நினைவுகளும் புகுந்து கொண்டுவிடுகின்றன. 


கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனை சிறையில் தள்ளினார்களாம். 

அவன் சிறையிலிருந்து கொண்டே கள்ள நோட்டை தயாரித்தானாம்.

இனி அவனை எங்கே கொண்டு போய் தள்ளுவது?


மனதுக்கு மனைவியை விட மற்றொருத்தி அழகாக தோன்றுகிறாள்.


கைக்குக் கிடைத்துவிட்ட மலரில் வாசம் தெரிவதில்லை.


கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன.


நிறைவேறிவிட்ட ஆசைகளில் மனது பெருமிதம் படுவதில்லை. 

நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது.


மகாலட்சுமியே மனைவியாக கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல் உள்ளவற்றை விட இல்லாதன குறித்து மனம் ஏங்குகிறது.


பிறர் புகழும் போது நெக்குருகிறது. 


இகழும் போது கவலைப்படுகிறது. 


ஓர் ஆயிரம் பின்னல்கள்! 

ஓர் ஆயிரம் சிக்கல்கள்! 


சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத் தான் தெரியும்.


இந்த சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத் தான் தெரியும். 


கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு.

அதை கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு. 


அலையில்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும் போது சலனம் இல்லாத மனம் ஒன்று உருவாகிவிடும்.


மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பார்கள்.

எப்போது ஊற்றுவான் என்று மனம் ஏங்குகிறது!


சலனமும் சபலமும் கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்? 


செத்துப்போன தன் குழந்தையை உயிர் மீட்டு தரும்படி புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாளாம்.


சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்து வா மீட்டு தருகிறேன் என்று புத்தர் சொன்னாராம். 


தாய் நாடெல்லாம் அலைந்து சாவு நிகழாத வீடு இல்லையே என்றாளாம். 


இந்தக் கதையும் அதில் ஒன்றுதான் என்று கூறி புத்தர் அவளை வழி அனுப்பினார். 


கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்து விட்டால் நான் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.


எனக்கு 100 என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. 


அது வரைக்கும் நான் பாக்கியசாலி.


அவனைவிட குறைவாகத்தான் இருக்கிறேன்.


எல்லாம் நிறைவேறி நிம்மதியாக உயிர்விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.


ஒருவனுக்கு துயரம் மனைவியால் வருகிறது.

ஒருவனுக்கு மக்களால் வருகிறது. ஒருவனுக்கு நண்பனால் வருகிறது.

ஒருவனுக்கு எதிரியால் வருகிறது. ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனாலோ வருகிறது.


கடலில் பாய்மரக்கப்பல் தான் காற்றிலே தள்ளாடுகிறது.


எதிலும் கெட்டிகாரனாக இருப்பவனுக்குதான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது.


காகிதக் கப்பலுக்கு என்ன கவலை? 


மனம் காகிதம் போல மென்மையாக இருக்கட்டும்.


சுக துக்கங்கள் கோடை ,பனி, மழை அனைத்தையும் தாங்கட்டும். 


மனதுக்கு வருகின்ற துயரங்களை பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு. 


பிறர்க்கு தொல்லை இல்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி. 

சாவைத் தான் தவிர்க்க முடியாது சஞ்சலத்தை  தவிர்க்க முடியும்.


சிறு வயதில் எனக்கு தாய் தந்தையர்கள் சாவார்கள் என்று எண்ணும் போது தேகம் எல்லாம் நடுங்கும்.


ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள்.


48 மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கி விட்டது.


ஐயோ இது நடந்து விடுமோ என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு. 


நடக்கத்தான் போகிறது என்று முன்கூட்டியே முடிவு கட்டி விட்டால் அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது. 


தருமனும் அழுதான் 

பீமனும் அழுதான் 

ராமனும் அழுதான் 

ராவணனும்  அழுதான் 


நெஞ்சத்தின் பதைப்பை கடன் பட்ட நெஞ்சம் என்றான் கம்பன்.


பட்ட கடன் ஒன்றானால் பத்திரத்தை தீர்த்து வாங்கிவிடலாம்.

ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும் வட்டி பாக்கி நிற்கிறது.


மழை நின்று விட்டாலும் தூவானம் தொடர்கிறது. 


மரணபரியந்தம் மனம் தன் வித்தையை காட்டிக் கொண்டே இருக்கிறது.


மனதுக்கு இப்படி எல்லாம் சுபாவங்கள் உண்டு என்று 20 வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால் பிறகு வருவன எல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும்.


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே. 


செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள்.


மனம் அங்காடி நாய் போல் அலைவதை அடக்குங்கள்.


சாகப் போகும் கட்டைக்கு சஞ்சலம் எதற்கு? 


செத்தார்க்கு நாம் அழுதோம்.

நாம் செத்தால் பிறர் அழுவார். 

அதோடு மறந்து விடுவார்.


மனதுக்கு நிம்மதியை கொடுங்கள். 


பகவான் கிருஷ்ணரின் காலடிகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குங்கள்.


இங்கே இருந்தாலும் அவர்தான் காரணம்.


அங்கே சென்றாலும் அவன் தான் காரணம். 


இங்கிருந்து அவன் கொண்டு போகும் தூதுவனுக்கு பேர்தான் மரணம்.


அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயிக்கட்டும்!


✅ அர்த்தம் உள்ள இந்து மதம்

No comments:

Post a Comment