வேதாத்திரிய மெய்விளக்கம் 10/01/2024
தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை
தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக்கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும்.*
*ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை. தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது.*
*எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது!*
*அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியதுபோக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது.*
*இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும். உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத்தான் தரும்.*
*தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ எதிர்கால விளைவாக துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே.*
*ஆசையை அடக்கினால் அடங்காது. உணர்ந்து ஆராய்ந்து அதனைப் பிறந்த இடத்திலேயே ஒடுங்கச் செய்ய வேண்டும்.*
தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று ஆராயும்போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதிபெறும். பிறந்த இடத்திலேயே அதாவது மனதிலேயே தானாகவே மாய்ந்துவிடும்.
*எழுந்த ஆசை செயலானால் அதன் காரணமாக விளையும் நன்மை, தீமை பற்றிய சிந்தனையின்றி, ஆராய்ச்சி, தெளிவு, திடசங்கற்பமின்றி, ஆசையை அதன் இயக்கத்திற்கு விட்டுவிட்டால், அனுபோகத்தைப் பெறாதவரை அதற்கும் மனதிற்கும் அமைதி இல்லை.*
*எனவே நமது "மனவளக்கலை" ஆகிய குண்டலினியோக (Simplified Kundalini Yoga) பயிற்சியின் முக்கிய அம்சம் "தற்சோதனை" (Introspection)"* .
*தற்சோதனை பயிற்சியில் உள்ள கோட்பாடுகளுக்கு உட்பட்ட பிறகும் மிச்சப்படும் ஆசை ஒன்றுக்கு மேல் இருக்குமேயானால், அதை ஒவ்வொன்றாக எடுத்து செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.*
*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*
*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*
No comments:
Post a Comment