Wednesday, April 17, 2024

பெற்றோர் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து எது?

பெரிய கல்லூரியில் இடம் கிடைத்து, அந்தகல்லூரியை அனுகிய மாணவிக்கு அவர்கள் உடனே கட்டச்சொன்ன அனுமதித்தொகையை கேட்டபோது மயக்கம் வராதகுறை. அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? தந்தை அரசாங்கத்தில் உயர்ந்த அதிகாரத்தில் பணியாற்றியபோதும் மிக நேர்மையானவர். அவருக்குக்கீழ் உள்ளவர்கள்கூட பெரிய வீடு வாகனம் என்று ஆடம்பரமாய் வாழ இவர்கள் குடும்பம் மட்டும் சாதாரனவாழ்க்கை வாழ்ந்தார்கள்.


ஓய்வுபெறும்போது ஒரு சிறியவீட்டை சொந்தமாக பெறுவதற்கே படாதபாடுபட்டார். குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் கல்வி வழங்கியதை தவிர வேறெதுவும் அவர்கள் ஆசைப்பட்டபடி செய்துகொடுத்ததில்லை. மிக வேகமாக இறந்து அவர் வானுலகம் போய்விட்டார்.


அவரது குடும்பமோ ஒவ்வொரு ரூபாயையும் யோசித்து செலவு செய்யவேண்டிய நிலை. அதனால் அவளுக்கு சிறுபிள்ளையாய் இருக்கும்போதே அப்பாவின்மீது ஒருவித கோபம்மட்டுமே இருந்தது. இன்றும் தனது இயலாமையை நினைத்து அப்பாவின் மேல் வந்த கோபத்தை சகித்துக்கொண்டு, சரி இந்த பெரிய கல்லூரியில் நம்மாள் பணம் கட்டி சேரமுடியாது, வேறு ஏதேனும் சிறிய கல்லூரியில் சேரவேண்டியதுதான், என்று மதிப்பெண் எடுத்தும் சேரமுடியாத துக்கத்துடனேயே, துணைக்கு வந்த அம்மாவையும் கூப்பிட்டுகொண்டு கல்லூரி வாசல் வராண்டவை அடைந்தவள், ஏக்கமாய் அந்தக் கல்லூரியை திரும்பிப் பார்த்துக்கொண்டு ஒருநிமிடம் நின்றாள்.


யாரோ தனது தந்தையின் பெயரைச்சொல்லி "நீ அவரது மகள் தானேயம்மா" என்று கேட்டது காதில்விழவே, திரும்பி அவரை கவனிக்க நல்ல உயர்தர ஆடையணிந்து பார்வையிலேயே பெரிய செல்வந்தர் என்பது தெரியும்படியான கம்பீர உருவத்துடன் ஒரு பெரியமனிதர். அவர் வந்த உயர் ரக வாகனம் வாசல்வரை அனுமதிக்கப்பட்டு அவர் இறங்கியதும், அப்பொழுதான் திரும்பி ஒரு ஓரத்தில் சென்று நின்றது. அந்தமாணவி சுதாரித்து ஆமாம் சார் என்று சொல்லும் முன்னே, எனக்கு உன் தந்தையை நன்கு தெரியுமம்மா. இந்த ஊருக்கு வந்து கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டு முதன்முதலில் ஒரு சிறு தொழிலை துவங்கவிருந்தபோது, அரசு அனுமதி பெறுவதற்காக மிகவும் சிரமப்பட்டேன். அதிகாரிகளால் பணத்திற்காக அலைக்கழிக்கப்

பட்டேன். உனது தந்தை தான் அதற்கான அனுமதியை ஒரு பைசா கூட எனக்கு செலவுவைக்காமல் வழங்கினார். அதன்பின் மெல்ல வளர்ந்து பல நிறுவனங்களை துவங்கி இன்று நகரின் ஒரு முக்கியமான ஆளாகிவிட்டேன். அதற்கிடையிலும் சில முறை அலுவல் காரணமாக உன் தந்தையை பார்த்ததுண்டு, அவரது உதவிக்காக, நான் நன்றாக இருக்கிறேன் எனது மனத்திருப்திக்காக இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று எது கொடுத்தாலும் கூட சிரித்தபடியே ஒதுக்கிவிடுவார், எவ்வளவு நேர்மையான மனிதர், உன்னையும் தாயாரையும் பார்த்ததில் மிக்கமகிழ்ச்சியம்மா என்று கூறியவர். "கல்லூரியில் சேர வந்தீர்களா, எந்த பிரிவில் சேர்ந்தீர்கள் எனக்கேட்டார்.


அந்தமாணவி தடுமாறியபடி ஆமாம்சார் இந்தப்பிரிவில் சேர வந்தேன் என்று கூறியவள், பணம் இல்லாததை கூற மனமின்றி, எல்லாம் சரியாகிவிட்டது இன்னொரு நாள் வந்து தான் பணம்கட்டி சேரவேண்டும் என்று கூறினாள். அவரோ எனக்காக கொஞ்சநேரம் இங்கே பொறுத்திருங்கள்  நான் உள்ளே போய் முதல்வரை பார்த்துவிட்டு உடனே வருகிறேன் என்று கூறியபடியே பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே போய்விட்டார். சிலநிமிடங்களிலே கல்லூரி பணியாளர் வந்து அவர்களை மீண்டும் முதல்வர் அறைக்கு அழைத்துக்கொண்டுபோக, அங்கே அமர்ந்திருந்த அந்த பெரிய மனிதரிடம் மிகுந்த மரியாதையுடன் எதையோ பேசிக்கொண்டிருந்த கல்லூரி முதல்வர், மாணவியைப் பார்த்ததும் அவளிடம், இந்த சேர்க்கை புத்தகத்தில் கையெழுத்துப் போடம்மா, உன்னை சாருக்காக ஒதுக்கியிருந்த இட ஒதுக்கீட்டில் சேர்தாகிவிட்டது, இனி உன் படிப்புமுடியும் வரை இங்கே எந்தப் பணமும் கட்டவேண்டிய தில்லை என்று கூறவே, அவள் அந்தப்பெரிய மனிதரைப்பார்த்து சார் என்று ஏதோகூற வாயெடுக்க, அவர் அவளை மேலே பேசவிடாமல் கையமர்த்திவிட்டு, "உன்தந்தை எனக்கு செய்த உதவிக்கும் அவரது நேர்மைக்கும் முன் இது ஒன்றுமே இல்லையம்மா" என்று கூறிவிட்டு, முதல்வரைப்பார்த்து "அப்ப நான் வருகிறேன்" எனக்கூறியபடி வேகமாக வெளியேறிப் போய்விட்டார்.


அந்த மாணவி படித்துமுடித்து ஒரு பொறுப்பான அரசு உத்தியோகத்தில் இருந்தபோது, அவரே ஒரு பொதுவிடத்தில் கூறியது இது. அன்றுமுதல் தனது தந்தையின்மீது அபரிமிதமான மரியாதை வந்ததுடன், தினம் காலையில் அவரது படத்தின்முன் தொழுதுவிட்டு அவர் காட்டியவழியிலேயே பணிபுரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.


வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டு நெறியோடு வாழவேண்டும் என்பதை தங்களைப்பார்த்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும்படி செய்தால், *அதுதான் பெற்றோர்கள் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரியசொத்து.*

No comments:

Post a Comment