Wednesday, April 17, 2024

வெற்றி தரும் ராம நவமி

விரதமுறை மற்றும் வழிபடும்முறை பற்றி அறிவோம்*.

மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.

சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் ராமர். உரிய நேரம் வந்தபோது இராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார். அதர்மத்தை அழித்து, தருமத்தை நிலை நாட்டினார்.

இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது.


நாளை (ஏப்ரல் 17) ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


அஷ்டமி, நவமி திதியின் கவலை :

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்யமாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறினர்.


அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்' என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.


விரதமுறை :

எந்தவொரு பண்டிகையை நம் வீட்டில் கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் வீட்டையும், பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருந்தால் அதை பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அனுமனின் படத்தை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


ராமரின் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து வாசனை மிகுந்த பூக்களை சூட்டி பூஜைக்கு தயார் செய்து வைக்கவும்.


பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ராமருக்கு பிடித்த பால் பாயாசம் மற்றும் பானகத்தை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.


பூஜை அறையில் அமர்ந்து 'ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மூன்று முறை உச்சரித்தாலும் தவறில்லை.


பூஜைகள் முடிந்த பின்னர் ராம பூஜைக்கு வைக்கப்பட்ட சந்தனம், குங்குமத்தை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் கொடுங்கள். அதே போல பூஜைக்கு பயன்படுத்திய பிரசாதங்கள் மற்றும் பதார்த்தங்களை அன்புடன் அனைவருக்கும் அளித்திடுங்கள்.


பலன்கள் :

காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.


ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.


ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம.... ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment