Wednesday, April 17, 2024

தமிழ்நாட்டில் அரசு நிலத்தில் குடியிருப்போர் பட்டா வாங்குவது எப்படி?


தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்போர், அல்லது பட்டா நிலத்துடன் அரசு நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்கள் பட்டா வாங்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்கள், அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து உள்ளவர்கள் அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் குறிப்பிட்ட நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா? இதை பற்றி இந்த பதிவில் இப்போது பார்ப்போம்..

சென்னையின் புறநகர் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து பல வருடங்களாக மக்கள் வசித்து வருகிறார்கள். ஆற்றின் கரையோரம்,. குளத்தின் கரையோரம், நீர் வழிப்பாதைகள் என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த நிலத்தை வேறு இடத்திற்கு விற்கவும் செய்கிறார்கள். இதுபோன்ற நிலங்களை பத்திரமும் முடிக்கிறார்கள்... ஆனால் இப்படிப்பட்ட நிலங்களை வாங்கினால் அந்த நிலம் புறம்போக்கு நிலம் ஆகும் இந்த இடத்தை யாராவது வாங்கினால் அது ஆக்ரமணம் என்று அரசு அழைக்கும்.. அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்று தான் அரசு அழைக்கும். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு இடங்கள் தற்காலிகமானதாகவோ அல்லது நிலையானதாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்காலும். ஆக்கிரமிக்கப்பட்ட அந்த இடத்தை அரசு ஆட்சேபனை அற்றவை என்று வகைபடுத்தி வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலங்கள் என்றால் மட்டும் அதற்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம் . வீடுகள் இல்லாத மக்கள் ஒப்படை பட்டா கேட்டு அரசிடம் மனு செய்யலாம். 

கிராமங்களை பொறுத்தவரை நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு எளிதாக பட்டா வாங்கிவிட முடியும்.. கிராம நத்தம் மனைகள் என்பது ஆட்சேபனை இல்லாத வகையாகவே பெரும்பாலும் இருக்கும். கிராம நத்தம் நிலம் என்பது கிராமங்களில் மக்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட இடங்கள் தான்..எனவே அங்கு பட்டா வாங்குவதில் பெரிய சிக்கல் இருக்காது. நீங்கள் உங்கள் இடத்திற்கான பட்டாவை ஆன்லைனிலேயே பெற முடியும்..

ஆனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் பட்டா வாங்குவது அவ்வளவு எளிதனாது அல்ல. பட்டா கொடுக்க முடியாது என்று அரசு கண்டிப்பாக சொல்லும். ஆக்கிரமிப்புக்கு அபராதம் விதிக்க மாட்டார்கள். சாதாரண தீர்வை மட்டும் போடுவார்கள்.. சென்னையை பொறுத்தவரை மிகவும் சிக்கலான விவகாரம் என்பதால் அரசு, குறிப்பிட்ட பகுதிகளில் பட்டா வழங்க பல்வேறு விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.. ஏராளமான ஏழை மக்கள் பலன் பெறுவார்கள் என்பதுடன், அந்த இடத்தில் நீர்வழிப்பாதை இல்லை, சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் மட்டுமே ஒப்படை பட்டா வழங்கும்.. அதாவது தெளிவாக சொல்வது என்றால், ஆட்சேபனைக்குரிய இடம் அல்லது வகைப்பாட்டில் நீங்கள் குடியிருக்கும் இடம் இருந்தால் மட்டுமே இந்த ஒப்படை பட்டா கிடைக்கும். இல்லாவிட்டால் எத்தனை வருடம் குடியிருந்தாலும் பட்டா வாங்குவது சாத்தியமே இல்லை.. எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீடு அல்லது கடைகள் இடிக்கப்படலாம்.

ஆட்சேபனையற்ற இடம் என்றால் பட்டா வழங்கும் போது குறிப்பிட்ட சதுர அடிக்கு மட்டும் இலவச பட்டா அரசு வழங்கும். அதை தாண்டி அதிகமாக இருப்பதற்கு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் அரசு விலை நிர்ணயித்து தொகை வசூலிக்கும் . ஆட்சேபனை அற்ற நிலங்களின் வகைகளை பார்ப்போம்.. நந்தவனம், அனாதீனம், தண்ணீர் பந்தல், மண்டபம், மானாவாரி தரிசு, சர்வே செய்யப்படாத இடங்கள், சாவடி, நத்தம், கலவை, தோப்பு, கல்லாங்குத்து, காடு/பாறை, மலை, கல்லாங்குத்து, மைதானம், திடல், வெட்டுகுழி. தீர்வை விதிக்க பட்ட மானாவாரி தரிசு, போன்ற ஆட்சேபனை அற்ற அரசு நிலங்களில் குடியிருப்போர் பட்டா வாங்க முடியும்.

அதேநேரம் தெரு, மயானம்/ சுடுகாடு, கோவில், சாலை, மற்றும் நீர்வழிப்பாதை நிலங்களில் எந்தகாலத்திலும் பட்டா வாங்கவே முடியாது. பொதுவாக அரசு நிலங்களில் எந்த வகையாக இருந்தாலும், அதனை வாங்கவே கூடாது.. பட்டா இல்லாத எந்த நிலத்தையும் வாங்குவதை தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர்.. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா இல்லாத நிலங்களை வாங்குவது ஆபத்தானது என்றும், பட்டா இருந்தாலும், நிலத்தின் வகைகள் மற்றும், வில்லங்கம் முதலியவற்றை பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.




No comments:

Post a Comment