மீன் வளர்ப்பு என்பது ஒரு சிறந்த கலை. மீன் தொட்டி வீட்டை அழகாக காட்டவும் பயன்படுகிறது. வண்ண தொட்டிகளில் நீந்தும் அழகு மீன்களை பார்த்தாலே மனதில் உற்சாகமும் அமைதியும் வந்துவிடும். பொதுவாக மீன்கள் அழகுக்காக மட்டுமின்றி அமைதிக்காகவும் மீன்களை வளர்க்கின்றனர்.
அரவணா வகை மீன்கள் :
2004 ம் வருஷம் வரையிலும் அரவணா தனி ராஜ்யமே நடத்திட்டு இருந்தது. ஆனா இப்ப அதோட மவுசு கொஞ்சம் குறைஞ்சுதான் போயிடுச்சு. அரவணா வகை மீன்கள்லயும் கிட்டதட்ட 10 வகை இருக்கு.
பச்சை அரவணா
தி சில்வர் ஏசியன் அரவணா
ரெட் டெயில்ட் கோல்டன் அரவணா
தி கோல்ட் கிராஸ்பேக்
ரெட் சில்லி கோல்டன் அரவணா
என பலவகைகள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நாடுகள்ல பிரபலமா கிடைக்கும்.
அரவணா வகை மீன்களோட தர்பாரே தனி. சில வகை மீன்கள் 4 1/2 அடி வரையிலும் கூட வளரும் என்பதால் அதுக்கு மிகப் பெரிய தொட்டி தேவை. அதுவும் இந்த மீன்கள் தண்ணியோட மேல் பரப்புலயே சதா சுத்திட்டு இருக்கும். அதனால ஹை ஜம்ப்ல வேற எக்ஸ்பர்ட்டான இந்த வகை மீன்கள் தண்ணிலேருந்து ஒரே ஜம்ப் செஞ்சு வெளிய வந்து விழ வாய்ப்பிருப்பதால தொட்டிய மூடியே வச்சுக்கனும்.
ஃப்ளவர்ஹார்ன்: (வாஸ்து மீன்கள்)
இந்த வகை மீன்கள் இயற்கையாய் உருவானது இல்லை. மலேசிய நாட்டு மக்களுக்கு முன்நெற்றி கொஞ்சம் எடுப்பாத் தூக்கிட்டு இருக்கற வகை மீன்கள் மேல ஒரு தனி ஈர்ப்பு. அதனால் 1994ல் ரெட் டெவில் சிச்லிட் (red devil cichlid) மற்றும் ப்ளட் பேரட் (blood parrot cichlid) என்ற இரு வகை மீன்களின் கலப்பில் உருவானதுதான் இந்த ஃப்ளவர்ஹார்ன். ஆரம்பத்தில் இரண்டே இரண்டு வகை மட்டுமே இருந்தது. இன்று 100க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அவற்றிலும் ஏறக்குறைய 20 வகைகளே பிரபலமாக உள்ளது.
ஓரியண்டல் ப்யூட்டி
கான்ஸ்டிட்யூஷன் க்ளாஸ்
வொண்டர் ஸ்பார்க்
ஸ்டார்ம் ரைடர்
தி ஹாப்பி ஸ்டார்
தி ராயல் டைகர்
தி ரெட் ப்யூட்டி
மூன்லைட் ப்யூட்டி
தி மே ப்ளாஸம்
போன்றவை ஒரு சில ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள்.
ஃப்ளவர்ஹார்ன் தோற்றம்:
அதிகபட்சமா 16 இஞ்ச் வரையிலும் வளரக்கூடியவை இந்த ஃப்ளவர்ஹார்ன் வகை வாஸ்து மீன்கள். நெற்றிப்பகுதி துருத்திக்கிட்டு பஸ் ஹாரன் மாதிரி இருக்கும். அதனாலேயே இந்த பேர் வந்திருக்கலாம். ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கற இந்த மீன்களோட பக்கவாட்டுல சீன எழுத்துக்கள எழுதி வச்சமாதிரி கறுப்பு கலர் டிசைன் இருக்கும். எல்லாம் சூப்பரா இருந்தாலும் இது பெருசானா என்ன கலர் மற்றும் டிசைன்ல இருக்கப் போகுதுன்னு அது குட்டியா இருக்கறப்ப தெரியாது. அதாவது வளர வளர அதோட டிசைனும் மாறிடும். சிலர் குறிப்பிட்ட நிறத்துல குறிப்பிட்ட டிசைன்ல இருந்தாதான் வாஸ்து நல்லா இருக்கும்னு நம்பறாங்க. அவங்க விலையப் பத்திக் கவலைப்படாம வாங்கும்போதே பெரிய மீன்கள வாங்கிட வேண்டியதுதான்.
என்ன விலை இருக்கும்?
ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள் குட்டியா இருக்கறப்ப விலை கொஞ்சம் கம்மியா இருக்கும். வளர வளர அதோட விலையும் வளரும். குறைந்தபட்சம் ரூ.150/- லேருந்து ரூ. 10 ஆயிரத்திற்கு அதிகமான மீன்கள் கூட இருக்கு.
வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் மீன் வளர்ப்பாளர்கள் உங்களுக்காக கூறியுள்ள டிப்ஸ்.
வீட்டில் வளர்க்கும் மீன் வகைகள்:
ரெட் கேப் கோல்டு, ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். வசதியானவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை. இவ்வகை மீன்களை வாங்கி வீடுகளில் வளர்க்கலாம்.
இதைத்தவிர சீன வாஸ்து மீனான புளோரா, அரவானா மீன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இஞ்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலைமட்டும் ரூ.25,000!. இத்துடன் கிரீன் ஸ்னோவொய்ட், சில்வர் பிளாக் வகை மீன்களுக்கு உண்டு.
கலைநயம் மிகுந்த மீன் தொட்டிகள்:
மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.
வீடுகளில் வைப்பதற்கென்று விலைகுறைவான, கலைநயம் மிக்க தொட்டிகளும் உள்ளன. மீன் தொட்டிக்குள் சின்ன சின்ன பாறைகள், கூழாங்கற்கள், செடிகள் போன்றவற்றை கொண்டு அழகுபடுத்தினால்தான் அவை அதற்குரிய இடங்களில் வசிப்பதைப் போல உணரும்.
கடல் மீன்களை தொட்டியில் வளர்க்கலாமா:
பட்டர்பிளை ஏஞ்சல், புளூரிங் ஏஞ்சல் போன்ற மீன்கள் எல்லாம் கட்டாயமாக கடல் நீரில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் செயற்கை உப்பு கலந்த நீரில் வளர்க்கலாம். ஆனால் செயற்கை உப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120. சாதாரணமாக 3 அடி தொட்டிக்கு கடல் மீன்கள் வளர்க்க ரூ. 10,000 வரை செலவாகும்.
மீன்களுக்கு இருவேளை உணவு:
இந்த மீன்களுக்கு என்று தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்டட் உணவு, வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட்ட டிரை வார்ம்ஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும். மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விடவேண்டும்.
அப்பொழுதுதான் மீன்கள் ஆரோக்கியமாக இருக்கும். மீன்களை வடிகட்டி நல்ல நீரில் பாதுகாப்பாக வைத்தபின்னர் தண்ணீரை வெளியேற்றி தொட்டியை கழுவவேண்டும். தொட்டிகளில் உள்ள வேஸ்டான செடிகளை அகற்றிவிட்டு, பின்னர் தண்ணீரை நிரப்பி அழகு படுத்திய பின்னர் மீன்களை மறுபடியும் தொட்டியில் விடவேண்டும். அடிக்கடி மீன் தொட்டியை சோதனை செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.
No comments:
Post a Comment