Thursday, April 25, 2024

சுவாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா...?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட செல்கையில், தேங்காய், பழம், பூ கொண்டு போவது வழக்கம். அவ்வாறு, சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் போது, தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா?*


அல்லது அவற்றை அகற்றிவிட வேண்டுமா? என்பது பற்றிய சந்தேகம் பலரிடமும் இருக்கும். ஆனால், யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ? யாரும் தவறாக நினைத்து கொள்வார்களோ என்று பலரும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. எல்லோரும், செய்கிறார்கள். நாமும் செய்வோம் என்று தான் பலரும் செய்கின்றனர். இந்நிலையில், அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.


*உடலின் அங்கமாக*


பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை, பரம்பரையாகக் குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமி என்பது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. அதுபோல, தேங்காயின் ஓர் உறுப்பாகத் திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றிவிட்டால், தேங்காய் பின்னம் (ஊனம்) அடைந்து விடும்.


பொதுவாக, இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும், அது பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே தான், தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும்.


*உடைத்த பிறகு*


உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்ததன் காரணமாக, அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும். மேலும், உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால், அவை குடுமி அகற்றி, சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.


*அதேபோல், கும்பாபிசேகம், ஹோமங்கள் நடத்தும் போது, கும்பம் வைத்து, அதில் இறைவனை குடியிருத்துவர். குடம், இறைவனின் திருமேனி. குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய், இறைவனின் சிரம்; தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவர். அதற்கு தேங்காய், சிகையுடன் அதாவது குடுமியுடன் திகழ வேண்டும். எனவே, குடுமியுடன் கூடிய தேங்காயைக் கும்பத்தில் வைப்பது வழக்கம்.*

No comments:

Post a Comment