Sunday, April 21, 2024

பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964)

பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியரானார்.

இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரைப் பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்கு முன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க் கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.

"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூறப் பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டுச் 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார், மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் , அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

No comments:

Post a Comment