Thursday, April 11, 2024

தகுதி என்ற மூன்றெழுத்து.

ஒவ்வொரு  மனிதனும் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று ஆசை இருக்கின்றது  . அதற்காக அவன் பலவிதத்தில் முயற்சி செய்துவருகிறான். 'தகுதி ' என்ற  மூன்றெழுத்தில் என்னதான் ரகசியம் இருக்கின்றது. இதோ அந்த சூத்திரம்..

தகுதி என்ற மூன்றெழுத்தில்...

த - தரம் என்ற மூன்றெழுத்து...

கு - குணம் என்ற மூன்றெழுத்து...

தி - திடம் என்ற மூன்றெழுத்து...

தரம்.

தரமுள்ள  மனிதன் என்றுமே தாழ்ந்து போனதாக சரித்திரம் இல்லை. பளிங்கு கல் என்ன தான்  பளபளப்பாக இருந்தாலும் அது வைரத்திக்கு ஈடு இணையாகுமா? போலியான தரம்  உண்மையான மதிப்புக்கு சமமாகாது! தரம் என்பது பல திறமைகள் சரியான  விகிதத்தில் கலந்து இருப்பது. அதாவது ஒரு வார்த்தையின் தரம்,  தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்தலில் இருக்கின்றது. ஒரு  பாடலில் இனிமை, தரமான அழகிய இராகங்களை கலந்து கொடுப்பதில் இருக்கின்றது.  ஒரு தோட்டத்தின் அழகு, தரமான அழகிய பூச்செடிகளை பொறுத்து இருக்கின்றது.  தரம் எந்தகாலத்திலும் நிரந்தரம்.

குணம்.

தண்ணீர்  ஒரு தங்க பாத்திரத்தில் அல்லது வெள்ளி பாத்திரத்தில் அல்லது  மண்பாத்திரத்தில் இருந்தாலும் அதன் குணம் மாறுவதில்லை. அதுபோல உங்கள் நிலை  உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் மனிதனின் குணமான அன்பு, கருணை, பாசம், இரக்கம்  , பொறுமை போன்ற குணங்களை மாறாமல் கடைப்பிடித்தல் அவசியம்.

திடம்.

தரம், குணம் இவைகள் இருந்தால் 'திடம் ' தானாக வந்துவிடும். இங்கு திடம் என்பது உன்மீதுள்ள உறுதியான நம்பிக்கை.

இதைத் தவிர வாழ்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. நீங்கள் வாழ்கையில் எதற்கு வேண்டுமானாலும் காத்திருங்கள். ஆனால் அது வீணாக போய்விடக்கூடாது.

2. நமது எண்ணங்களினால் தான் நாம் இன்று இந்த நிலைமையில் இருக்கின்றோம்.

3. நீங்கள் வாழ்கையில் எந்த வேலை வேண்டுமானாலும் செய்ய நினைக்கலாம். ஆனால் அதை ஆரம்பிபதில் தான் அதன் வெற்றி இருக்கின்றது.

4.  நமது 'வருங்காலம்' என்கிற பாறையை செதுக்கும் சிற்பி நாம் தான். அது நன்றாக  செதுக்குவதும் , மட்டமாக செதுக்குவதும் நம் கையில் தான் இருக்கின்றது.

5.  உங்களுக்கு எதற்கும் நேரம் கிடைக்காது. உங்களுக்குத் தேவையான நேரத்தை  நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவசியமான வேலைக்கு முன்னுரிமை  கொடுப்பது மூலம் சாத்தியப்படும்.

வாழ்கையில் உங்கள் 'தகுதி'யை உயர்த்திக் கொள்ளுங்கள்! மூன்றெழுத்து மூல மந்திரத்தின் உதவியினால்!

No comments:

Post a Comment