Friday, May 17, 2024

திரவ நைட்ரஜன் என்றால் என்ன?

அதை உண்டால் உங்கள் உடல் என்னவாகும்? நிபுணர்களின் விளக்கம்



திரவ நைட்ரஜன் என்றால் என்ன?

“திரவ நைட்ரஜன் என்பது தோராயமாக -196 டிகிரி செல்சியஸ் (-321 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இந்த மிகக் குறைந்த வெப்பநிலையால் தான், உணவுகளை உறைய வைக்க, கெட்டுப் போகாமல் பாதுகாக்க இதைப் பயன்படுத்துகிறார்கள்” என்கிறார் சென்னை கிறித்துவக் கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் ஞானமணி சிமியோன்.


தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவே உள்ளது. இதற்கு நிறமும் இல்லை, மணமும் இல்லை. இந்த வாயுவை, -150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிரையோஜெனிக் செயல்முறை மூலம் திரவமாக மாற்றுவார்கள். இந்த திரவ நைட்ரஜன் தீப்பற்றக்கூடிய ஒரு ரசாயனம் அல்ல. காரணம் இயற்கையாகவே நைட்ரஜன் எதனுடனும் எதிர்வினை புரியாது, இதில் நச்சுத்தன்மையும் இல்லை.”


“ஆனால் நைட்ரஜன் அதன் முழு திரவ நிலையில் இருக்கும்போது, மிகவும் கவனமாக கையாள வேண்டும். காரணம் -196 டிகிரி செல்சியஸ் என்பது மிகவும் குறைவான ஒரு வெப்பநிலை. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் திரவ நைட்ரஜனை கையாண்டால் அது உடலின் செல்களை உறைந்துப் போகச் செய்யும்.” என்றார்.


அதேவேளையில் திரவ நைட்ரஜன் என்பது சாதாரண வெப்பநிலையில் எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு திரவம் தான் என்கிறார் அவர்.


“அவ்வாறு ஆவியாகி வரும் புகையைத் தான் நாம் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளில் பார்க்கிறோம். அதை அதிகமாக சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் உட்பட சில பிரச்னைகள் ஏற்படும், காரணம் நைட்ரஜன் வாயு ஒரு இடத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை உடனடியாக வெளியேற்றிவிடும்” என்றார் பேராசிரியர் ஞானமணி.

திரவ நைட்ரஜன் எதற்கு பயன்படுகிறது?

“இதன் மிகக் குறைவான வெப்பநிலை காரணமாக பல வருடங்களாக உணவுப் பதப்படுத்தல் துறையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக இறைச்சி வகைகள், மீன் வகைகளை பதப்படுத்த இது பயன்படுகிறது” என்கிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.


“உதாரணமாக பெருமளவு மீன்களைப் பிடித்தவுடன் அல்லது இறைச்சியை தோல் நீக்கி வெட்டியவுடன் அதை உடனடியாக பதப்படுத்த இதைப் பயன்படுத்துவார்கள். இதுவும் சட்டென்று இறைச்சியை உறைய வைத்துவிடும். -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் தான் உணவில் இருக்கும் நுண்ணுயிரிகள் உறைந்த நிலையில் இருக்கும், எனவே உணவும் கெட்டுப்போகாது.”


“அப்படி பயன்படுத்தும்போது கூட அரசு கூறியுள்ள விதிகளின் படி தான் திரவ நைட்ரஜன் உபயோகிக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், இவ்வாறு உறைய வைக்கப்பட்ட உணவுகளை உடனடியாக சமைக்கக்கூடாது, சிறிது நேரம் சாதாரண வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.”


“காரணம், அதிலிருக்கும் திரவ நைட்ரஜன் முழுவதும் ஆவியாகிவிடும் என்பதால் தான். பிறகு தான் அதை உயர் வெப்பத்தில் சமைத்து உண்ண வேண்டும். இப்படியிருக்க நேரடியாக திரவ நைட்ரஜனை ஒருபோதும் உணவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது” என்கிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.

திரவ நைட்ரஜன் உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?

வெளிநாடுகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஓரளவு உண்டு என்றாலும், இந்தியாவில் அவ்வகை உணவுகள் அல்லது பானங்களின் அழகு மற்றும் ஈர்க்கும் தன்மை, அதிலிருக்கும் ஆபத்தை மறைத்துவிடுகிறது என்கிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.


“சிறிது காலத்திற்கு முன்பு ‘ஸ்மோக் பீடா’ என்ற ஒன்று பிரபலமானது. பார்த்தவுடன் புரிந்துவிட்டது அதில் திரவ நைட்ரஜன் உள்ளது என. அதை வாயில் போட்டு புகை விடுவது ஒரு கேளிக்கையாக பார்க்கப்பட்டது. எவ்வளவு ஆபத்தான விஷயங்களை நாம் விளையாட்டாக கடந்து போகிறோம் என வருத்தமாக இருந்தது."


"ஏனென்றால், அதிகமான திரவ நைட்ரஜன் உடலின் உள்ளே செல்லும்போது, அது உங்கள் உடலின் செல்களை உறைந்துபோகச் செய்யும். ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரிந்தால் மட்டுமே நடக்க வேண்டிய ஒன்று, உயிருடன் இருக்கும்போதே நடந்தால் என்னவாகும். அதைத் தான் திரவ நைட்ரஜன் செய்கிறது” என்கிறார்.


தொடர்ந்து பேசிய அவர், “திரவ நைட்ரஜன் முக்கியமாக வயிறு சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த திரவம் வயிற்றில் துளை கூட போட்டுவிடும், குடலையும் இது பாதிக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.”


“செல்கள் உறைந்துவிடுவதால், நம் உடலில் வழக்கமாக நடக்கும் செயல்கள் அனைத்தும் பாதிக்கப்படும். திரவமாக மட்டுமல்லாது, அது ஆவியாகும் போது அதை சுவாசிப்பதும் உடலுக்கு நல்லதல்ல. காரணம், இந்த நைட்ரஜன் வாயு என்பது நிறமில்லாத, மணம் இல்லாத வாயு.”


“வேறேதும் வாயுவாக இருந்தால், அதற்கு ஒரு மணம் இருக்கும். எனவே அதைச் சுவாசிக்கும்போது ஒரு அசௌகரியம் ஏற்பட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவோம். ஆனால் இந்த வாயுவை சுவாசித்து, மூச்சுப் பிரச்னை ஏற்படும்போது மட்டும் தான் ஏதோ சிக்கல் என்று புரியும்.”


“திரவ நைட்ரஜன் முழுவதுமாக ஆவியாகிவிட்டால், அந்த உணவை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மக்கள் உண்பதே, அந்த வெள்ளைப் புகையின் அழகுக்காக தானே. அதன் ஆபத்தை மக்கள் உணர வேண்டும். எனவே இது குறித்து கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நல்லது தான்” என்று கூறினார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.

திரவ நைட்ரஜன் உணவுகளுக்கான கட்டுப்பாடுகள்

“திரவ நைட்ரஜன் ஒரு உணவே கிடையாது. இது ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உணவை பதப்படுத்த, பேக் செய்ய உபயோகப்படுத்தப்படும் ஒரு ரசாயனம். எனவே தான் திரவ நைட்ரஜன் கலந்த நேரடி உணவுப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளோம்” என உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளின் மோசமான விளைவுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வருவதால், உணவுப் பாதுகாப்பு துறையிலிருந்து எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சென்னையில் உள்ள உணவகங்களின் பட்டியலைத் தயார் செய்து வருகிறோம். விரைவில் அங்கெல்லாம் சோதனை நடத்த உள்ளோம்."

"நிறைய பார்கள், பார்ட்டி ஹால்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் என தகவல்கள் வந்துள்ளன. அங்கும் சோதனை நடத்தப்படும். உணவுப் பாதுகாப்புத்துறையின் விதிகளின் படி, இது உணவுப் பொருளே கிடையாது. எனவே கண்டிப்பாக நேரடி உணவுகளோடு திரவ நைட்ரஜன் எடுத்துக்கொள்ளக்கூடாது."

"உணவுகளை பதப்படுத்த, பேக் செய்ய மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் சதீஷ்குமார்.

No comments:

Post a Comment