Saturday, May 25, 2024

வாழ்க்கையில் கஷ்டங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா?

 **

நம்முடைய வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியதாகும். எப்போதுமே துன்பம் வந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும். எப்போதுமே இன்பம் என்றால் வாழ்க்கை திகட்டிவிடும். இன்பமும், துன்பமும் மாறி வரும்போது வாழ்க்கையை எதிர்கொள்ளவும், வாழ்வதற்கும் பிடிப்பை தரும். இருப்பினும் சில சமயங்களில் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து மனம் வருந்தும்போது நான் சொல்ல போவதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


எப்போதாவது மலையேறியதுண்டா? கடினமாக மலையேற்றம் செய்த பிறகு கடைசியாக மேலே ஏறி காணக்கூடிய காட்சி அற்புதமாக இருக்கும். கஷ்டப்பட்டு மலையேறியதை மறந்துவிடும் அளவிற்கு அழகோவியமாக இருக்கும் இயற்கையை ரசித்து கொண்டேயிருக்கலாம்.


அப்படி நாம் உயரமான மலையினை ஏறி அங்கிருந்து கீழே வந்த பாதையை பார்க்கும்போது, நாம் வரும்போது பிரமாண்டமாக தெரிந்து வீடுகளும், கட்டிடங்களும் உயரத்திலிருந்து பார்க்கும்போது, சின்ன பொம்மைகள் போல காட்சியளிக்கும். இவ்வளவு ஏன்? உலகத்திலேயே உயரமான எவரெஸ்ட் மலைக்கூட விமானத்திலிருந்து பார்க்கும்போது சிறியதாக தெரியும்.


நம்முடைய வாழ்வில் வரும் கஷ்டங்களும் இது போன்றது தான். பக்கத்திலிருந்து பார்க்கும்போது எல்லா பிரச்னைகளும் பிரமாண்டமாகவும், பெரிதாவும் தெரியும். இதுவே பிரச்சனைகளை தூரத்தில் வைத்து பாருங்களேன். அது எவ்வளவு சிறிய பிரச்னை என்பது புரியும். இதுக்கு போயா இவ்வளவு வருத்தப்பட்டோம் என்று ஆகிவிடும்.


பிரச்னை எப்போதும் நம்மை வருத்தப்பட வைப்பதில்லை. அதை நாம் பார்க்கும் விதமும், கையாளும் விதமுமே நம்மை வருத்தப்பட வைக்கிறது. பெரிதாக இருக்கிறதே என்று நிறைத்து வருத்தப்படும்போது பாரமாகவும், விசாலமாகவுமே தெரியும். இதுவே ‘இதையெல்லாம் என்னால் சமாளிக்க முடியும்’ என்ற எண்ணம் மனதில் தோன்றும்போது, மலை போல இருக்கும் துன்பங்கள் கூட துரும்பாக மாறிவிடும். இன்பமோ, துன்பமோ அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது நம் வாழ்க்கையின் போக்கை மாற்றக்கூடியதாகும்.


நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று வெவ்வேறு உயரத்தை அடையும் போதும், அதுவரை நம்மை செய்த கேலி, கிண்டல், அவமானம், போராட்டம் இவை அனைத்துமே நமக்கு சிறிய துரும்பாகவே தெரியும். எவ்வளவு உயரத்திற்கு வந்தாலுமே ஏறி சென்ற படியை மறக்க கூடாது என்று சொல்வார்.


இன்று நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு அன்று பட்ட துன்பங்களும், கஷ்டங்களுமே காரணமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். துன்பங்களே நம்மை பக்குவமான மனிதர்களாக செதுக்கியிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அதை சரியாக புரிந்துகொள்வது மேலும் வாழ்வில் வெற்றியடைவதற்கான வழியாகும்.

No comments:

Post a Comment