Thursday, February 29, 2024

நீங்கள் "பேசியே! கொல்வீர்கள்" என்று நான் நினைக்கவே இல்லை

கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு நீங்கள் 

குற்றம் செய்யாமல் 

இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.


நீங்கள்  "பேசிக்கொள்வீர்கள்"

என்று தான் நான் நினைத்தேன்! 

நீங்கள் "பேசியே!  கொல்வீர்கள்" என்று நான் நினைக்கவே இல்லை.


"பொழுதுபோக்காக" என்னில் சில இருப்பது உண்மைதான்.

ஆனால் நீங்கள் அதில் 

"பொழுதையே! போக்கினால்" 

அதற்கு நான் பொறுப்பல்ல.


கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேசுவீர்கள். அதெல்லாம்

வெறும் வாய் சொல்தானா?


குடும்பத்தோடு "பாசப்படங்கள்"

எடுத்து மகிழ்ச்சியடைய சொன்னால் குமரிகளின் "ஆபாசப்படங்களை" பார்த்து மகிழ்ந்தால் உங்களுடைய 

ஆறாவது அறிவு எங்கே ? எதற்கு ?


பிள்ளைகள் விளையாட்டு விளையாடுவதால் படிப்பு கெட்டுப்போகிறது என்று குற்றங்களை என் மீது கொட்டுபவர்களே அன்று குழந்தை பருவத்தில் நிலாவைக்காட்டி

மலர்களைக்காட்டி பாடிக்காட்டி ஆடிக்காட்டி பாலும் சோறும்

ஊட்டினார்கள்.

நீங்களோ உங்களுடைய 

சோம்பேறித்தனத்தால் "என்னை காட்டி சோறும் பாலும் ஊட்டி

கெட்ட பழக்க வழக்கங்களை 

கற்று கொடுக்கின்றீர்கள்.

"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ?


என்னுடைய நன்மைகளை நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்.

 

என்னில் கடிகாரம் இருக்கும் 

கட்டவேண்டியதில்லை.


காலண்டர் இருக்கும் 

கிழிக்க வேண்டியில்லை.

 

கேமரா இருக்கும் ஃபிலிம் போட 

வேண்டியில்லை.

 

மின் விளக்கு இருக்கும் மின்சாரக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

 

பாட்டு கேட்கலாம் 

கேசட் போட வேண்டியில்லை.

 

கால்குலேட்டர் பயன்படுத்தலாம்

சக்தி தேவையில்லை.

 

வழி காட்டுவேன். யாரிடமும் கேட்க 

வேண்டியதில்லை.

 

பணம் அனுப்புவேன் கூலி கொடுக்க 

வேண்டியதில்லை.

 

தகவல்களை அனுப்பி வைப்பேன் 

தேடிச்செல்ல வேண்டியதில்லை.


அவசரத்துக்கு மட்டுமல்ல அன்றாடம் உதவிகளையும் செய்வேன்

ஆனால் உங்களிடம் நன்றியகை்கூட 

நான் எதிர்பார்ப்பதில்லை.

"சொல்லும் நேரத்திற்கு 

எழுப்பி விடுவேன்"

என்றுமே தவறியதில்லை.

 நினைவுப்படுத்த சொன்னதை

"நினைவுபடுத்துவேன்" 

என்றுமே மறந்ததில்லை.


உங்களுக்கு ஒன்று தெரியுமா ?

காவலர்களுக்குப் பயப்படாத 

அரசியல்வாதிகளும்சமூக விரோதிகளும் அதிகாரிகளும் கூட 

என்னில் இருக்கும் சமூக ஊடங்களுக்கு பயப்படுவார்கள் 

தெரிந்து கொள்ளுங்கள்.


"பகுதி நேர வேலை" வாய்ப்பைக்கூட 

ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன் 

கொஞ்சம் பார்த்து பேசுங்கள்.


எதில் இல்லை தீமை? 

மின்சாரத்தை தவறாகத்தீண்டினால் 

மரணத்தை ஏற்படுத்தவில்லையா? 

நெருப்பை தவறாக பயன்படுத்தினால் எதுவானாலும் எரித்து சாம்பலாக்கவில்லையா? 

வெள்ளமாக வரும் தண்ணீர்

ஊரையே அடித்துச்செல்ல வில்லையா?

பொறுமைக்கு உவமையாக சொல்லும் பூமியே! 

நிலநடுக்கத்தால் 

புதைக்குழியாகவில்லையா?


அளவுக்கு மீறி உண்டால் உணவே 

ஆளைக்கொல்லவில்லையா? 


"ஆறறிவு" படைத்தான் என்று மார்பு  தட்டிக் கொள்ளும் நீ "ஓறறிவு" கூட இல்லாத நான் குற்றம் செய்வதாக

சொல்கிறாய். உன்னை நினைத்து 

அழுவதா சிரிப்பதா என்றே

தெரியவில்லை.


வாகனம் ஒரு மனிதனின் மீது 

மோதிவிட்டால் வாகனத்தைத்தானே 

கைது செய்ய வேண்டும் ?

ஏன் வாகனத்தை இயக்கிய

 ஓட்டுநரை கைது செய்கின்றீர்கள் ?

அப்படி என்றால் 

நான் குற்றவாளியா?

என்னை இயக்கும் 

நீங்கள் குற்றவாளியா.


No comments:

Post a Comment