Sunday, February 18, 2024

எண்ணெய்க் குளியல்... எது சரி... யார், எப்படி எடுக்கலாம்?




``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” அதாவது, நான்கு நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியல் அவசியம் என்கிறது சித்த மருத்துவம். கோடைக்காலம் என்றால் வாரம் இருமுறை, மழைக்காலம் என்றால் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.

ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. ஆனால், காலமாற்றத்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.




அதிலும் தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே நம்மில் பலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம். பழக்கமே இல்லாமல் திடீரென்று தீபாவளிக்கு எண்ணெய்க் குளியலை எடுக்கையில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளும் சிலருக்கு வந்துவிடுகின்றன.

அதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீபாவளியன்று எண்ணெய்க் குளியலை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார். எண்ணெய்க் குளியல் குறித்து அவர்தரும் மிக முக்கியத் தகவல்கள் இதோ உங்களுக்காக...

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் எது?

நல்லெண்ணெய் எண்ணெய்க் குளியலுக்கு மிகவும் உகந்தது. அதேபோல தேங்காய் எண்ணெய்’, விளக்கெண்ணெய் போன்றவற்றையும் எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து முக்கூட்டு எண்ணெய்யாகவும் பயன்படுத்தலாம்.


தீபாவளியன்று காலையில் எத்தனை மணிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது?

காலையில் 5 மணிவாக்கில் எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. ஆனால், எண்ணெய் தேய்த்துக் குளித்து எனக்குப் பழக்கமில்லை. அதனால் சீக்கிரம் குளித்தால் சளி பிடித்துவிடுமோ என்ற கவலை இருப்பின் தீபாவளியன்று சூரியன் லேசாக எட்டிப் பார்க்கும் பொழுதில் அதாவது, காலையில் 5.30 மணி அளவில் குளிக்கலாம்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எண்ணெய் தடவி (சொதசொதவென எண்ணெய் தடவத் தேவையில்லை. உடல் முழுக்க எண்ணெய் ஒட்டியிருக்கும் அளவுக்குத் தடவினால் போதும்). அரை மணிநேரம் வெயிலில் இருந்துவிட்டு பின்னர் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல் ஆகும்.

தீபாவளியன்று இந்த முறையையே பின்பற்றுங்கள். ஆனால், நடைமுறையில் எனக்கு இது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால் உச்சந்தலை, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள், முதுகின் பின்புறம், கழுத்தின் பின்புறம், தோள்பட்டை, முட்டி போன்ற உடலின் மூட்டு இணைப்புகளில் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் முதல் அரை மணிநேரம் ஊறவிட்டுப் பின்னர் குளிக்கலாம்.

இது ஓரளவுக்குப் பலன் கொடுக்கும் என்றாலும் உடல் முழுக்க எண்ணெய் தடவிக் குளிப்பதே சிறந்தது.


அதேபோல சிலர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார்கள். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். ``எண்ணெய் பெறின், வெந்நீரில் குளிப்போம்” என்பதைத்தான் சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது.

சிலர் எண்ணெய் நன்றாக ஊற வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்நாள் இரவே தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு தூங்கிவிட்டு மறுநாள் குளிப்பார்கள். இப்படிச் செய்தால் காய்ச்சல் வருவதோடு, குளிர்ச்சி அதிகமாவதால் சில நேரங்களில் வலிப்பும் வந்துவிடும் என்பதால் இச்செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அன்று மட்டும் உடல் சற்று சோர்வாக இருப்பதுபோலத் தெரியும்.


சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள்:

தீபாவளி அன்றுதான் நான் புதிதாக எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்பவர்கள் சளி பிடிப்பதைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை விஷயங்களை மேற்கொள்ளலாம்.

அதாவது, எண்ணெயில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை சுக்குத்தூள், ஒரு பூண்டுப் பல், ஒரு மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து லேசாகச் சூடாக்கி பின்னர் அதைத் தேய்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் சிறிது மிளகுத்தூளை உச்சந்தலையில் தேய்த்து பின்னர் அதன்மேல் எண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது எண்ணெயைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், உடலுக்குத் தேய்க்கும் எண்ணெய் என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்துவைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பொதுவாகத் தலையில் அழுக்கு இருக்கும் என்பதால் தலையில் தேய்த்த எண்ணெயையே மற்ற உடல் பாகங்களுக்கும் தேய்த்தால் தலையில் உள்ள அழுக்கு மற்ற உடல்பாகங்களுக்குப் போய்விட வாய்ப்பிருக்கிறது.


சீயக்காயே சிறந்தது!

ஷாம்பூ போன்றவை எண்ணெய்யின் பிசிபிசுப்பை முற்றிலும் நீக்காது என்பதால் எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் தலைக்கு சீயக்காய் போட்டே குளியுங்கள். உடலில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பை எடுக்கவும்கூட சீயக்காய் மற்றும் கடலைமாவுக் கலவையைப் பயன்படுத்துங்கள். அல்லது உடலில் நலங்கு மாவு தேய்த்தும் குளிக்கலாம். இதுபோன்ற பொடிகளைத் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பு, அழுக்குகள் போன்றவை நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் வளர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இத்தனை நாள்கள் இல்லையென்றால் தீபாவளியன்று புதிதாக இந்தப் பழக்கத்தை ஆரம்பிப்பதைத் தவிர்க்கலாம்.

ஏனென்றால் இது மழைக்காலம் என்பதால் புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அது சட்டென்று சிலருக்கு சளி அல்லது காய்ச்சலை உண்டாகிவிடும். எனவே, உச்சந்தலையில் மட்டும் சிறிது எண்ணெயை வைத்துக் குளிப்பது நல்லது. வெயில் காலம் வந்த பிறகு, முழுமையான எண்ணெய்க் குளியலை கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, தலைக்கு சாம்பிராணி புகை போடுவது மிகவும் நல்லது. தலையில் சேர்ந்திருக்கும் நீரை சாம்பிராணிப் புகை எடுத்துவிடும். ஆனால், இப்போது கடைகளில் சுத்தமான சாம்பிராணி கிடைப்பது அரிதாகிவிட்டதால் மூலிகை தூபப்பொடியை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

தும்பைப்பூ இலை, துளசி இலை, அரச இலை போன்றவற்றைச் சேகரித்து காயவைத்துப் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின்னர் சிறிதளவு கட்டிச் சாம்பிராணியுடன் இந்த மூலிகை தூபப்பொடியைச் சேர்த்துப் புகை போட்டுத் தலைக்குக் காட்டலாம். ஆனால், வீசிங் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நலம்.

புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அன்று மட்டும் உடல் சற்று சோர்வாக இருப்பதுபோலத் தெரியும். எண்ணெய்க் குளியலைத் தொடரத் தொடர இந்தச் சோர்வு நீங்கிவிடும். உடல் குளுமையாவதோடு, புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்பதால் நீங்கள் இந்தப் பழக்கத்தை அதன்பின்னர் நிறுத்தவே மாட்டீர்கள்.

எனவே, இத்தனை நாள்கள் நீங்கள் எண்ணெய்க் குளியலை எடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இந்தத் தீபாவளியை ஒரு சாக்காக வைத்து இதைத் தொடங்குங்கள். குறிப்பாக, வீட்டின் பெரியவர்கள் உங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த நல்ல பழக்கத்தைக் கொண்டு சேருங்கள்.


எண்ணெய்க் குளியல் எடுத்தால் என்ன சாப்பிடலாம்?

தீபாவளி என்றில்லை, எப்போது எண்ணெய் தேய்த்துக் குளித்தாலும் அன்று குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட வேண்டாம். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடம்பு குளிர்ந்திருக்கும் என்பதால் செரிமானத்தைத் தாமதமாக்கும் ஹெவியான உணவுகளையும் தவிர்த்திடுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று அசைவ உணவுகளைக் கூடுமானவரை சாப்பிட வேண்டாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடலின் வெப்பம் கண் வழியே வெளியேறுவதால் கண் எரிச்சல் இருக்கும். குறிப்பாகத் தூக்கம் வரும். தூக்கம் வருகிறதே என்று மதியம் இரண்டு மூன்று மணிநேரம் தூங்கிவிட்டால் உடலின் வெப்பம் அதிகமாவதோடு உடல் சோர்வும் அதிகமாகும். எனவே, தூக்கம் வருவதுபோல இருந்தால் நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்துவிடுவது நல்லது.



உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு, உற்சாகத்தையும் சருமத்துக்கு பொலிவையும் எண்ணெய்க் குளியல் தரும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், எண்ணெய்யை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தேய்க்கும்போது இதன்மூலம் உடலின் கழிவுகளை நீக்கக்கூடிய நிணநீரின் செயல்பாடு தூண்டப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, நன்மைகளின் சுரங்கமாக இருக்கும் எண்ணெய்க் குளியலை வரும் தீபாவளியிலிருந்தாவது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

No comments:

Post a Comment