Monday, February 26, 2024

ரத்தன் டாடா சொன்ன வரிகள்



இரும்பை வேறு எந்தப் பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதேதான் நமக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.

நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை; எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை.
இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.

எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது; உடலில் சர்க்கரை அதிகரித்துவிட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களைத் தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.

என்னதான் ஆகிவிடும்? ஒரு கை பார்த்துவிடலாம்.
இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள்தான்.

மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது? அடுத்தஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.

இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

செத்துப் போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?

நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?

ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?

நம்மிடம் உயிர் இருக்கிறதா? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கைதான். அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும!

No comments:

Post a Comment