Saturday, February 10, 2024

யார் நல்லவர்?

1. நம்பிக்கைத் துரோகம் செய்யாதவர்,

2. தன் சுய நலத்துக்காக அடுத்தவருக்குக் கெடுதல் செய்யாதவர்.

3. தன் சுயநலத்துக்காக அடுத்தவரை சாமர்த்தியமாகவும், திட்டமிட்டும், அவர்களுக்கு சிரமம் கொடுப்பதைப் பற்றிக் கவலைப் படாமலும் உபயோகித்துக்கொள்ளும் 'திறமை' இல்லாதவர்,

4. தன்னால் முடியும் என்றால் முடியும் என்றும், முடியாது என்றால் முடியாது என்றும் சொல்லி, முடிந்ததைச் செய்து கொடுப்பவர். முடியாததையும், செய்ய விருப்பம் இல்லாததையும் பளிச்சென்று சொல்லாமல் ஏதோ செய்யப்போவதுபோலக் காட்டிவிட்டுச் செய்யாமல் இருப்பவர் அல்லர். அதாவது, நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர் அல்லர்.

5. உண்மை பேசுபவர். அவர் சொன்னால் கண்டிப்பாக உண்ஂமையாய் இருக்கும் என்கிற நம்பிக்கையை உங்களுக்கு முற்றிலும் அளிப்பவர்.

6. பிறருக்கு உதவுவதில் உண்மையான ஆர்வம் காட்டுபவர். 'இவனுக்கு இதை செய்து கொடுத்தால், பிற்பாடு இவனை இதற்கு உபயோகப் படுத்திக்கொள்ளலாம்' என்று கணக்குப் போடாதவர்.

7. லஞ்சம் வாங்காதவர்.

8. கடன், கைமாற்று கேட்காதவர்!

9. ஒரு வேளை கடன் வாங்கினால், நீங்கள் நினைவு படுத்தாமலேயே தாமாகத் திருப்பித் தருபவர்.

10. தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்துவிட்டால், தயக்கமில்லாது மன்னிப்புக் கேட்பவர்.

11. சொன்ன சொல்லைக் காப்பவர். அப்படிக் காக்க முடியாவிட்டால், வருந்தி மன்னிப்புக் கோருபவர்.

12. தம்மினும் தாழ்ந்தவர்களையும் (பதவியில், அதிகாரத்தில், படிப்பில், பொருளாதாரத்தில், அந்தஸ்தில்...) பண்போடு நடத்தக் கூடியவர்.

13. காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் இவை குறைவாய் இருப்பவர்; கட்டுக்குள் வைத்திருப்பவர்.

14. பேச்சு, பார்வை, நடத்தை இவற்றில் எதிர்பாலரிடம் நாகரீகமாக நடந்துகொள்பவர்.

15. தனக்கொரு நியாயம், அடுத்தவருக்கொரு நியாயம் எனும் இரட்டை அளவைகள் மிகக் குறைவாய் வைத்திருப்பவர்.

16. புரளி, பொய், வம்பு பேசாதவர். வேண்டாத வழக்குகளுக்குப் போகாதவர். உண்மையைத் திரித்துப் பேசாதவர். புரளி பேசாதவர்; வதந்திகளைப் பரப்பாதவர்.

17. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்.

18. 'காரியம் ஆகவேண்டுமானால் காலைப் பிடி, பின்னர் மென்னியைப் பிடி' என்று பழகாதவர்.

19. உங்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் குழைந்து குழைந்து பேசுவதும், நீங்கள் அவரிடம் ஒரு காரியமாகப் போனால் அலட்சியமாய் / திமிறாய் முறுக்கிக்கொண்டும் பேசும் இரட்டை முகம் இல்லாதவர்.

20. தனி மனித ஒழுக்கம், கற்பு, நேர்மை இவற்றைப் பரிபாலிப்பவர்.

21. பெரும்பாலும் சட்டத்துக்கும், சமூக தார்மீக நியதிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்துகொள்கிறவர்.

22. ஒரு அவமானம் தரும் செய்கையைச் செய்ய நேர்ந்துவிட்டால் கூனிக் குறுகிப் போகிறவர்.

23. செய்நன்றி மறவாதவர்.

24. வெளி வேடத்துக்காகவோ, சுயநல வேட்டல்களுக்காகவோ அன்றி உண்மையிலேயே தெய்வ நம்பிக்கை உள்ளவர்.

25. விருந்தோம்பல் குணம் உள்ளவர்.

26. பண விஷயத்தில் என்னாளும் நேர்மை தவராதவர்.

27. பிறர் செய்த கெடுதல்களை நாளாவட்டத்தில் மறந்து மன்னித்தும் போகிறவர்.

28. பழிக்குப் பழி வாங்காதவர்.

29. கணவன்/ மனைவி / மேலதிகாரி மேலிருக்கும் (வெளிப்படுத்த முடியாத) கோபத்தை, குழந்தைகளிடமோ, பலவீனமான பிறரிடமோ திசைதிருப்பி வெளிப்படுத்தும் குணம் இல்லாதவர்.

30. வெறுதே உணர்ச்சிக்கு அடிமையாகி ஒருவரை வெறுப்பதோ, இகழ்வதோ,  எதிர்ப்பதோ செய்யாமல் அறிவையும் பயன் படுத்தி உணர்ச்சிகளை சமன்படுத்தத் தெரிந்தவர்.

31. கடும் சொற்களைப் பயன்படுத்தி அடுத்தவரைத் திட்டமிட்டுப் புண்படுத்தாதவர்.

32. உங்கள் நேரத்தை மதிப்பவர்.

33. பொய்யாய் பாராட்டு, முகஸ்துதி செய்யாதவர்.

மேற்கண்டவைகளில் ஒருவர் 55% க்கு மேல் தேறினால் நல்லவர்..

No comments:

Post a Comment