Friday, January 10, 2025

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦


**

*அம்மா பிள்ளைகள்*

சில பேர் குழந்தைகள்கிட்டே பேசும் போது பார்த்தீங்கன்னா... குழந்தை மாதிரியே பேசுவாங்க! அதாவது மழலை மொழியிலேயே பேசுவாங்க. அப்படிப் பேசினாத் தான் குழந்தைக்குப் பிடிக்கும் புரியும் ங்கறது இவங்க நினைப்பு!

ஆனா அப்படிப் பேசறது தப்புங்கறாங்க ஆராய்ச்சியாளர்கள்.

நாம பேசறதை பார்த்துத் தானே குழந்தைகள் பேசக் கத்துக்கணும்...

நாமளே குழந்தைகள் மாதிரி பேசிக்கிட்டிருந்தா

அதுகள் நல்ல விதமா பேசக் கத்துக்கறது எப்படி?

இதனாலே குழந்தையின் பேசக் கற்றுக் கொள்கிற வேகம் தடைப்படும்!

ஒரு பத்துக் குழந்தைங்க கிட்டே... உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா? ன்னு கேட்டா... பாதிக் குழந்தைகளுக்கு மேலே அம்மாவைப் பிடிக்கும்ன்னு தான் சொல்லும்!

அப்பா என்ன பாவம் பண்ணினார்.

அது ஒண்ணுமில்லே...

குழந்தை தாய் வயிற்றுலே ஏழு மாச குழந்தையா இருக்கிறப்பவே அம்மா குரலைக் கேட்டுக்கிட்டு உக்கார்ந்திருக்குமாம்! 

தாயின் வயிற்றுக்குள்ளே ஒரு சின்ன 'மைக்' கை வச்சி ஒலிப்பதிவு பண்ணிப் பார்த்திருக்காங்க. மத்தவங்க பேசறதை விட

அம்மாவே பேசற குரல் தான் ரொம்பத் தெளிவா கேட்குதாம்!


ஆக ஒரு குழந்தை ஆரம்பத்துலே இருந்தே கேட்கிற குரல் அம்மாவின் குரல்! அதனாலே தான் அம்மான்னா ஒரு தனி பாசம்! 


தாயின் பேச்சைக் கேட்டு... வயத்துலே இருக்கிற குழந்தை பேசக்கத்துக்குது. பிறக்கும் போதே நமக்கெல்லாம் தாய் மொழிப்பற்று உண்டுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க!


பிரஞ்சு மொழி பேசற ஒரு குடும்பத்துலே ஆராய்ச்சி நடத்தினாங்களாம்! 


பிறந்து நாலு நாள் ஆகறதுக்குள்ளே குழந்தை ரஷ்ய மொழியை விட பிரஞ்சு மொழியை விரும்புதுங்கறதை தெளிவு படுத்தியிருக்காங்க. 


இன்னொரு செய்தி.


எட்டு வயசுக்கு மேலே புதுசா கற்றுக் கொள்கிற எந்த மொழியுமே தாய் மொழியை விட கஷ்டமாத்தான் இருக்குமாம்! 


ஒரு குழந்தை பிறந்து எட்டு மாசம் ஆனதுமே... அதுக்கு நாம பேசற பேச்சு புரிய ஆரம்பிச்சுடும்! 


அதனாலே அதுக்கப்புறமும் அது கிட்டே உக்காந்துகிட்டு சின்ன குழந்தை மாதிரி நீங்களும் மழலை பேசிக்கிட்டு இருக்காதீங்க!


தெளிவா நல்ல தமிழ்லே பேசுங்க... அது புரிஞ்சிக்கும் - கத்துக்கும்! 


அந்த நேரத்துலேயெல்லாம் நாம் பேசறதை நாம் பேசறது மாதிரியே குழந்தை திருப்பிச் சொல்லும்! - கிளி மாதிரி! 


தானே யோசிச்சிப் பேச ரெண்டு  மூணு வருஷம் ஆகும். அதுக்கிடையிலே குழந்தை தப்புத் தப்பா வார்த்தைகளைப் போட்டுப் பேச ஆரம்பிக்கும்!


இப்ப உதாரணத்துக்கு... பூனைக்குட்டி வந்தார். அப்பா போச்சு... இப்படியெல்லாம் பேசும்...


அதைப் பார்த்துச் சிரிக்கப்புடாது... கிண்டல் பண்ணக் கூடாது. வார்த்தை வித்தியாசத்தைப் பொறுமையா சொல்லிக் கொடுக்கணும். நீங்களும் நிறைய பேசணும் ... குழந்தைகளையும் நிறைய பேசச் சொல்லணும்! நல்லா பேசிக்கிட்டிருக்கிற குழந்தை கிட்டே போயி வாயை மூடு ன்னு சொல்லிக்கிட்டிருக்கப் புடாது! 


ஜான்லாக் அப்படிங்கற அமெரிக்க விஞ்ஞானி இதைப் பத்தியெல்லாம் நிறைய ஆராய்ச்சி பண்ணியிருக்கார்.


அவர் தான் சொல்றார்... குழந்தை தாயின் வயிற்றில் ஏழு மாசமா இருக்கறப்பவே பேசக் கத்துக்க ஆரம்பிச்சுடுது. அப்படின்னு! 


சீக்கிரம் பேச ஆரம்பிச்சுடற குழந்தை புத்திசாலியா இருக்கும்ன்னு சில பேர் சொல்றது உண்டு! 


அதுவும் ஒரு பொய்யான நம்பிக்கை தான் - ங்கறார் இந்த ஆராய்ச்சியாளர்.


பிறந்த குழந்தைக்கு அப்பாவை விட அம்மாவைப் பிடிச்சிருக்கிறது ஏன்? - ங்கற கேள்விக்கு இவருடைய ஆராய்ச்சி விடை சொல்லுது.


அப்பாக்கள் குழந்தைகள்கிட்டே கெட்ட பேர் வாங்கறதுக்கு வேறே பல காரணங்களும் உண்டு. 


ஒரு அப்பா தன் பிள்ளையைப் பார்த்துக் கேட்டார்.


''உங்க கணக்கு வாத்தியார் Home Work கொடுத்திருக்கிறதா சொன்னியே... அதுக்கு நான் ஏதாவது உதவி பண்ணவா? அந்தக் கணக்கை நான் போட்டுத தரவா?" ன்னு கேட்டார்.


"வேணாம்ப்பா! நானே அதை தப்பா போட்டுக்கறேன்!" அப்படின்னான் பையன்.


🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

No comments:

Post a Comment