Saturday, December 9, 2023

ஓர் சமூகப்பார்வை

ஒரு எலிகூட மழைகால ஆபத்தை அறிந்துதான் வளை தோண்டும், ஒரு பறவை கூட ஆபத்தில்லா மரத்தில்தான் கூடுகட்டும், ஒரு பாம்பு கூட பாதுகாப்பான புற்றில்தான் புகுந்து வாழும்


எறும்பு கூட  வெள்ளம் வந்தால் தப்பிக்கும்படிதான் தன் வீட்டை அமைக்கும்


அவைகளுக்கு இருக்கும் முன் எச்சரிக்கை கூட இங்கு இல்லை, அப்படி ஒரு சமூகமாக  இது மாறிவிட்டபின் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்...


கால காலமாக பெய்யும் மழைதான் இப்போதும் பெய்கின்றது, அக்கால முன்னோர்கள் எது பள்ளமோ அதை நீர் நிலையாக்கிவிட்டு எது மேடான பகுதியோ அங்கு குடியிருப்பை அமைத்து சரியாக வாழ்ந்தார்கள்


அவர்கள் கற்றவர்கள் அல்ல, பெரும் எந்திரமோ 50 மாடிகளை எளிதாக கட்டும் தொழில்நுட்பம் கொண்டவர்களோ அல்ல, ஆனால் எது பள்ளம் எது மேடு என உணர்ந்து சரியாக எல்லாம் அமைத்திருந்தார்கள், நிம்மதியாய் வாழ்ந்தார்கள்


இது அறிவுடை சமூகம் அல்லவா? பகுத்தறிவோடு பண அறிவும் சேர்ந்த சமூகம் அல்லவா? அதனால் ஏரி குளம் கால்வாய் என ஒன்றைவிடாமல் விற்றுவிட்டார்கள்


பட்டா, பத்திரம் என மக்களை ஏமாற்றலாம் பூமியினையும் மழையினையும் ஏமாற்றமுடியுமா?


அது சரியாக பள்ளம் நிறைந்த பக்கம் ஓடுகின்றது, 

அடைபட்ட ஆறுகள் கால்வாய்களை காட்டி கொடுக்கின்றது


ஆக காலம் காலமாக பெய்ய்ம் மழை அப்படியேதான் இருக்கின்றது, 

இங்கு மோசடியும் குழப்பமும் செய்ய கூடா அத்தனையும் செய்துவிட்டு மழையினை அளவுகோல் வைத்து அளந்து பழிபோட்டு கொண்டிருக்கின்றார்கள்


இதில் வரலாறு காணா மழை என வார்த்தை வேறு


அவனவனுக்கு சென்னை வரலாறே தெரியாது, வீடுகட்டும் நிலத்தின் வரலாறும் தெரியாது, அவன் வரலாறே சரியாக தெரியாது


இந்நிலையில் மழையின் வரலாறை அறிந்து பேசுவது போல் அவ்வளவு அழிச்சாட்டியம். பரிதாபத்துகுரிய கூட்டம் என்பதை தவிர சொல்ல என்ன இருக்கின்றது..


கூவமும் அடையாரும் வெள்ளத்தை கொட்டி இலட்சம் மக்களை பாதிக்கிறதென்றால் தவறு யார்பக்கம்.?



 🌷🙏🌷

No comments:

Post a Comment