Sunday, December 10, 2023

எத்தனை கோடி பெறும்?

சோழநாட்டு அரசன் ஒருவன் தனது அவையை அலங்கரிக்கும் புலவர்களைப் பார்த்து,

நாளையைப் பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் என்று கட்டளை இட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப்பாடுவது? என்று புலவர்கள் திகைத்தனர்.

அப்போது அங்கே ஒளவையார் வந்தார். புலவர்களின் கவலைக் கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உங்களுக்காக இப்பொழுதே நான், நாலு கோடிப்பாடலைப் பாடுகிறேன்.அரசனிடம் சென்று அதைப்பாடிக் காட்டுங்கள்” என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார் ஒளவையார்.

அப்பாடல் இதுதான்:


"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை கோடி பெறும்.


உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்.


கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும்.


கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும்."


இப்பாடலின் பொருள் மிக எளிதானது.நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்:




முதல் கோடி:




நல்ல பண்புகள் இல்லாத ஒருவர் நம்மை மதித்து அழைக்கவில்லை என்றாலும்,நாம் அவரை மதித்து, அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பதும், செல்லாமல் இருப்பதும் கோடிப் பொன்னுக்கு இணையாகும்.




இரண்டாவது கோடி:




நம்மை மதித்து, உண்ணுமாறு விரும்பிக்கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில், நாம் சென்று உண்ணாமல் இருப்பது கோடிப் பொன்னுக்கு இணையாகும்




முன்றாவது கோடி:




கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். நல்லவர்களோடு நட்போடும், உறவோடும் இருப்பது கோடிப் பொன்னுக்கு இணையாகும்.




நான்காவது கோடி:




பலகோடி பலன் தமக்கு கிடைப்பதாக இருந்தாலும், தான் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது, கோடிப் பொன்னுக்கு இணையாகும்.




பணமே உலகம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் காலத்தில், அப்படி இல்லை நற்குணங்களே முக்கியம் என்று இந்த நாலு கோடி பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார் ஔவையார்

No comments:

Post a Comment