Thursday, May 9, 2024

சிக்கல்களும் - தீர்வுகளும்...!

காலம் எதற்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை, அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியா விட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது... 


பல நேரங்களில் சிக்கல்கள் ஆரம்பமான இடத்தை விட்டு நாம் தீர்வுகளை தெருவில் தேடுகின்றோம். சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம்... 


நாம் என்ன தவறு செய்தோம்...? எதனால் இந்தச் சிக்கல் நேர்ந்தது..? என்று சிந்தித்து தெளிவு பெறுவது இல்லை... 


சரி!, நாம்தான் சிக்கல்களுக்கு ஆட்டுவிப்பவராக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை திறமையாக எதிர் கொள்கிறோமா...? அதுவும் இல்லை!. 


முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்து விட்டுத் தரையில் தேடிக் கொண்டு இருந்தார். 'எதைத் தொலைத்து விட்டீர்கள் முல்லா...?' என்று வழிப்போக்கர் ஒருவர் கேட்டார்... 


எனது வீட்டுத் 'திறவுகோல்'(சாவி) என்று கூறிவிட்டு தொடர்ந்து தேடினார் முல்லா... 


மற்றவரும் சேர்ந்து தேடத் தொடங்கினார். சிறிது நேரத் தேடலின் பின் வழிப்போக்கர் முல்லாவிடம் கேட்டார், 


"எங்கே திறவுகோலைத் தொலைத்தீர்கள்...?" என்று வழிப் போக்கர்  கேட்க, அதற்கு முல்லா, "என் வீட்டில்தான் தொலைத்தேன்," என்றார்... 


வழிப்போக்கருக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு, "வீட்டில் தொலைத்ததை ஏன் தெருவில் தேடுகின்றீர்கள்...?" என்று சினந்து கொண்டார்... 


அதற்கு முல்லா அமைதியாக சொன்னார், "இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது" என்று!, 


வாழ்க்கை வாழ்வதற்குத்தான், அழுது வடிப்பதற்கு அல்ல, அத்தகைய வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தரும்..


ஆம்!. எந்த சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. *நாம் சற்று அறிவை பயன்படுத்தி தீர்வை கண்டால், சிக்கல் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படுவது  உறுதி...!*

No comments:

Post a Comment