🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩
தினம் ஒரு சிந்தனை
**
நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அந்த மதத்திற்குரிய கடவுளை நீங்கள் கட்டாயம் வழிபட வேண்டும் என்று எந்த மதமும் உங்களை கட்டுப் படுத்தாது.
கோவிலிலே திருவிழா நடைபெறுகிறது. தீபாராதனை நடைபெறுவதற்கான அறிவிப்பாக கோவில்
மணியோசை எழுப்பப் படுகிறது.அதைக் கேட்ட வீட்டுப் பெரியவர்கள்,
”என்ன மசமச என்று அமர்ந்திருக்காய்! எழுந்து கோவிலுக்கு வேகமாகப் போ! சாமி கும்பிடு!” என்று இளையவர்களை விரட்டி விடுவார்கள்.
சிலர் கோவிலுக்கு விருப்பத்தோடு செல்வார்கள்.
சிலர் வீட்டிலேயே அமர்ந்திருப்பார்கள்.
கோவிலுக்கு வந்தவனுக்கு அதிகமான வரத்தையும்,
கோவிலுக்கு வந்து வழி படாதவனுக்கு வரமே கொடுக்காமலும் இருப்பவன் இறைவன் அல்ல.
உங்களிடம் தூய உள்ளமும், நற்குணமும் இருந்தால் இறைவனே உங்களைத் தேடி வந்து, உங்கள் இதயம் என்ற கோவிலிலே குடி கொண்டு விடுவான்.
நான் என் நண்பனை மிகவும் நேசிப்பேன். அவனைப் பலரும் வந்து வணங்கி, தங்களின் துயர் நீங்கும் வழி கேட்டுச் செல்கிறார்கள்.
என் நண்பனை அவர்கள் இறைவனாகக்
கருதி வழிபடுகிறார்கள்.
ஆனால் நான் அவனை நண்பனாக மட்டுமே பார்க்கிறேன்.
எனக்கும் அவன் பல வழிகளைக் காட்டி இருக்கிறான்,
அதற்காக நான் அவனை வணங்க மாட்டேன் மாறாக அவனைக் கட்டித் தழுவி மகிழ்வேன்.
அமர்ந்தாலும் எழுந்தாலும் இறைவனின் திருநாமத்தை உச்சரிப்போர் அனைவரும் உத்தமர்களா? என்பது அவர் அவர் மனம் அறியும்.
இறைவனை நீ வணங்கவில்லை என்றால் உன் இறுதிக் காலம் அமைதியாகச்
செல்லாது என்று நம்மைப் பார்த்துச் சொல்வோர் அதிகம்.
தங்களது இறுதிக் காலத்தை அறியாத மூடர்கள் தான் இப்படிச் சொல்லித்
திரிவார்கள்.
என்னைப் பொறுத்த வரை “தன்னை வணங்கவில்லை என்பதற்காக,
பக்தர்களை தண்டிப்பது இல்லை! இறைவன்”
இதை மனதிலே ஏற்றி வைத்துக் கொண்டு வாழுங்கள். அருவமும் உருவமும் அற்ற இறைவனை எல்லா மதமும் வெளிப் படுத்துவது, ”அன்பே இறைவன்” என்பதாகும்.
அப்படி அன்பு நிறைந்த இறைவன், பக்தன் ஒருவன் கோவிலுக்கு வந்து தன்னை வழி படவில்லை என்பதற்காக தண்டிப்பானா?
🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩
No comments:
Post a Comment