Monday, November 13, 2023

உற்று நோக்காதீர்கள்


சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள். 


எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கலை ன்னு சொல்லும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை, 


அம்மாவை தரக்குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி 

துயருறும் கணவர்களின் கண்களை, 


துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு 

நானென்ன செய்தேன் என்று அழுது  கெஞ்சிக்கொண்டிருக்கிற காதலனின் கண்களை, 


கடன்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்கிற மகனின் தாழ்வான குரலுக்கு பதில் தரமுடியாமல் கூனி குறுகும் குடும்ப தலைவனின் கண்களை, 


தன்னை விட சிறியவனின் திருமணத்தில் உனக்கு அடுத்தது எப்போ? என்ற கேள்வியை எதிர்க்கொள்ளும் முதிர்கண்ணனின் கண்களை, 


வரிசையில் நிற்கும்போது தன்னை முந்திச்செல்லும் வலியவனிடம் எதிர்த்து பேச திராணியில்லாமல் விட்டுக் கொடுக்கும் அப்பாவியின் கண்களை, 


பனிரெண்டு மணிநேர வேலைக்கு பிறகு வியர்வை படிந்த முகம் சட்டையுடன் டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் பரிதாபத்துக்குரிய மாத சம்பளகாரனின் கண்களை, 


சரியாக உண்ணும் போது இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலை கிடைக்காமல் இப்படியே இருப்பாய் என்ற தந்தையின் நக்கலுக்காக பாதியில் எழுந்துச்செல்லும் வேலையில்லா பட்டதாரியின் கண்களை, 


உச்சி வெயிலில் மேல் சட்டை இல்லாமல் சாலை வேலை செய்யும் ஒருவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உட்கார்ந்த வேளையில் மேலாளரின் அதட்டல் சத்தம் கேட்டு எழுந்து போகின்ற சாமனியனின் கண்களை, 


இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி ஓட்டமுடியும் என்று நினைத்து தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை, 


எப்போதும் உற்று நோக்காதீர்கள்

அப்படி பார்த்தீர்களானால் கரைந்து போவீர்கள்.....

No comments:

Post a Comment