Monday, November 13, 2023

யூ ஆர் அப்பாயின்டட்

 அவனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை.


இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுகிறான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள்.

அவனின் வெறுப்பெல்லாம், ‘விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பதுதான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான்.

அவனுடைய முறை வந்தது. இன்டர்வியூ செய்பவர், ஃபைலை வாங்கிப் பார்த்தார். சர்டிஃபிகேட்டுகளுக்கு நடுவே இருந்த, ‘என்னால் பேச முடியாது, மற்றவர்கள் சொல்வதைக் காதால் கேட்க முடியாது’ என்று எழுதியிருந்த காகிதமும் இருந்தது. அதைப் படித்துவிட்டு, நாலாக எட்டாக கிழித்துப் போட்டார் அந்த மனிதர். கோபத்தோடு அவரைப் பார்த்தான்.

அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதினார். இவனிடம் நீட்டினார்.

‘என்னைப் பணியில் சேர்த்துக்கொண்டால் வீண் அரட்டை அடிக்க மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பேச முடியாது. எனக்குக் கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் கவனம் சிதறும் வாய்ப்பு இல்லை. எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி என்னால் செய்ய முடியும். உங்கள் கேள்விகளுக்கு நான் தயார்!’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் ஒரு உண்மையை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற வழி புரிந்தது ரவிச்சந்திரனுக்கு! கண்களில் நீர் கசிய அவரை நன்றியோடு பார்த்தான்.

‘யூ ஆர் அப்பாயின்டட்!’ என்று அவர் உதடு முணுமுணுப்பது புரிந்தது.

No comments:

Post a Comment