Monday, November 13, 2023

தனியா ஓட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டான்

பசியோடு ஓட்டலுக்குள் நுழைந்தேன்.‘‘இதோ பார்… நாளையிலிருந்து இந்த அழுக்கு பேன்ட்டெல்லாம்
போட்டுட்டு வரக்கூடாது… பளிச்னு சுத்தமா இருக்கணும்’’
என்று இளம் வயது சர்வரை எச்சரித்துக்கொண்டு இருந்தார்
முதலாளி.

தலையாட்டிவிட்டு என்னிடம் வந்தவன், ‘‘என்ன சாப்பிடறீங்க?’’
என்றான்.

பின்னாலேயே வந்த முதலாளி, ‘‘வர்றவங்களுக்கு முதல்ல
வணக்கம் சொல்லுடா’’ என்று கோபப்பட்டார்.

இட்லி, சாம்பார் கொண்டுவரச் சொன்னேன்.

வரும் வழியில் இன்னொரு சர்வர் மேல் மோதி, சாம்பார் கிண்ணம்
கீழே விழுந்தது.

‘‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு… இப்படி மேலும்
கீழுமா கொட்டினா, லாபம் எங்கிருந்து வரும்?’’ – மறுபடி முதலாளி
எரிந்து விழுந்தார்.

இட்லி சாப்பிட்டதும், ‘‘அவ்வளவுதானே சார்?’’ என்றான் சர்வர்.

‘‘டேய்… அறிவு கெட்டவனே! இன்னும் என்ன சாப்பிடறீங்கன்னு
கேளுடா!’’ என்று அவன் தலையில் குட்டினார்.

எனக்குப் பரிதாபமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்து பில்லுக்குப்
பணம் தரும்போது முதலாளியிடம் கேட்டேன். ‘‘ஏங்க… வறுமை
தாங்க முடியாம பொழைக்க வந்தவன்கிட்ட இப்படியா கடுமையா
நடந்துக்கறது?’’

முதலாளி சிரித்தபடி சொன்னார்… ‘‘சார்! இவன் என் பையன்.
தனியா ஓட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டான். அதான் நெளிவு
சுளிவை எல்லாம் கத்துக்கொடுக்கறேன்…’’

பையனும் சிரித்தான்.

No comments:

Post a Comment