Monday, November 13, 2023

எப்படி சரி பண்ணலாம்னு தான் பார்க்கனும்.

 பள்ளிகூடம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் மலர். அங்கே அப்பா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.


‘அப்பா எனக்கு நிறைய அட்டை, கலர்பேப்பர், கலர்பேனா எல்லாம் வேணுப்பா”

‘எதுக்கம்மா பள்ளிக்கூடத்துல ஏதாவது போட்டியா”

‘போட்டியெல்லாம் இல்லப்பா, அந்தகாலத்துல வாழ்ந்த மக்களோட வீடுகள், அரண்மனை மாதிரிகள் செய்து காட்டனும்ப்பா, அதுக்கு மார்க் உண்டுப்பா”

‘அப்படியா, சரிம்மா. அப்பா நாளைக்கு வாங்கி தாறேன்’. மறுநாள் எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்தார் அப்பா.

பள்ளி கூடம் முடித்து வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய வீட்டு பாடங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு நேரங்களில் அப்பா வாங்கி தந்த பொருட்களை பயன்படுத்தி, அந்த காலத்து வீடுகள், அரண்மனை, கோவில், கிணறு என ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தாள் மலர்.

ஒருவாரம் கழித்து எல்லாவற்றையும் செய்து முடித்தாள்;. அதில் ஒரு அரண்மனை, சில வீடுகள், கிணறு, கோவில், தோட்டம் அமைந்திருந்தாள்.

பின் தனது அப்பாவை கூட்டிக்கொண்டு வந்து, தான் செய்தவற்றை காட்டினாள.; அதை பார்த்த அவர் ஆச்சரியப்பட்டு,மலரை தூக்கி முத்தமிட்டு, ‘ரொம்ப நல்லா செய்திருக்க, அப்படியே தத்ரூபமா இருக்கு” என்று பாராட்டினார்.

மறுநாள், மலர் செய்து வைத்திருந்த மாதிரிகளை பள்ளியில் காண்பிக்க எடுக்க சென்றாள். அங்கே ஒரு மாதிரி வீடு உடைந்திருந்தது.

அதை பார்த்த அவள் ‘அப்பா ஒரு மாதிரி வீடு உடைச்சிருப்பா.. மார்க் எல்லாம் போச்சு” என்று அழ ஆரம்பித்தாள்.மலரை தூக்கி வைத்து ‘அழாதம்மா” என்று சமாதானப்படுத்தினார் அப்பா.

‘அப்பா இதெல்லாம் நான் எவ்வளவு யோசிச்சு, யோசிச்சு, செய்தேன் தெரியுமா. அதுவுமில்லாம ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் கண் முழிச்சி இருந்து கஷ்டப்பட்டு செய்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சே’ என்று சொல்லி அழுது கொண்டேயிருந்தாள்.

மலரின் அப்பா, அவளை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.இதைப்பார்த்த பக்கத்து வீட்டு, தாத்தா மலரை கூப்பிட்டு, அந்த உடைந்த வீட்டை கொண்டுவரச் சொன்னார்.

‘பாப்பா, அழக்ககூடாது, நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அப்படி செய்றியா..?’

‘ம்ம்.. சரிதாத்தா சொல்லுங்க”

‘உடைஞ்ச வீடு பக்கத்துல தாத்தாவின் பழைய வீடுன்னு எழுதி வைச்சிடு. யாராவது கேட்டால், இது அந்த காலத்துல எங்க தாத்தா வீடா இருந்துச்சு. பெரிய மழையை பெய்தப்ப இடிச்சிருச்சுன்னு சொல்லிடு, மார்க்கெல்லாம் குறைக்க மாட்டங்க சரியா பாப்பா” என்றார் தாத்தா.

கண்களை துடைத்துவிட்டு, ஒரு அட்டையில் தாத்தாவின் பழைய வீடு என்று எழுதி, உடைந்திருந்த வீட்டில் ஒட்டிவைத்து. விட்டு ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்றாள்.

‘ ஹலோ குட்டிப்பாப்பா ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அதை எப்படி சரி பண்ணலாம்னு தான் பார்க்கனும், அதை விட்டுட்டு அழதுக்கிட்டே இருந்தால் எந்த பயனும் இல்ல சரியா '' என்று சொல்ல

''மம் சரி தாத்தா இனி அழமாட்டேன். பள்ளிக்கூடம் போயிட்டு வாறேன் டாட்டா தாத்தா” என பள்ளிக்கு உற்சாகமாக கிளம்பினாள் மலர்.

No comments:

Post a Comment