Sunday, September 10, 2023

செக்குமாடு-சின்னஞ்சிறு கதை

சில வாரங்களுக்கு முன்பு நண்பருடைய மகள் திருமணத்திற்காக கடலூர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன்...


 காலை திருமணம் முடிந்ததும் கிராமத்தைச் சுற்றி வரலாம் என்று கிளம்பினேன்,..


 ஊர் ஓரமாக செக்குமாடு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கவனித்து ஆச்சரியமாக அதன் அருகில் சென்றேன்...


 நமது பகுதியில் எந்திரம் வைத்து செய்வதைப் பார்த்த நமக்கு செக்குமாடு வைத்து எண்ணெய் ஆட்டுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது.….


யாருடைய மேற்பார்வையும் இன்றி மாடு தானாக சுற்றிக் கொண்டிருந்தது...


 அருகில் யாரும் இல்லை.. பக்கத்தில் ஒரு குடிசை இருந்தது.. அங்கே சென்று பார்த்தால் பெரியவர் ஒருவர் பழைய கூழ் குடித்துக் கொண்டிருந்தார்....


 அவரிடம் ஐயா செக்குமாடு உங்களுடையதா? என்று கேட்டேன்..


 ஆமாம் தம்பி என்றார்... வியாபாரம் நன்றாக போகிறதா? என்று கேட்டேன்..…. இப்போது பரவாயில்லை தம்பி என்றார்...

 இப்படித்தான் முதலில் எண்ணெய் ஆட்டி பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.. இடையில்தான் யாரோ சிலர் கிளப்பிவிட்டதை நம்பி சூரியகாந்தி எண்ணெய் என்றெல்லாம் மாறிவிட்டோம்... அவ்வளவு சூரியகாந்தி விதை உலகில் உற்பத்தியாகிறதா என்றுகூட யோசிக்கவில்லை.... மறுபடியும் மாற்றம் வந்தது மகிழ்ச்சி தம்பி என்றார்...


 ஐயா எந்திரம் வைத்தால் வேலை சுலபமாக முடியுமே... இன்னும் செக்குமாடு வைத்து செய்கிறீர்களே? என்று கேட்டேன்...

 தம்பி ...எந்திரம் வைத்தால் எண்ணெய்  சூடாகி அதன் தன்மையையே மாற்றிவிடும்... இதுபோல செக்கில் ஆட்டும் போது தான் எண்ணெய் இயல்பான குணத்தை கொண்டிருக்கும்... உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்... என்று அனுபவித்து சொன்னார்... மன மகிழ்ச்சி அடைந்த  நான் *ஐயா நீங்கள் இங்கே கூழ் குடித்துக் கொண்டிருக்கிறீர்களே.. அங்கே மாடு சுற்றாமல் ஏமாற்றினால் என்ன செய்வீர்கள்?* என்று அறிவாளி தனமாக (?)கேட்டேன்...


 அவர் என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு *தம்பி ..மாட்டின் கழுத்தில் ஒரு மணி கட்டி இருக்கின்றேன்.. சுற்றிவரும் பொழுது அதன் சத்தம் கேட்கும்.. கேட்காவிட்டால் வாயால் ஒரு சத்தம் போடுவேன்.. உடனே மாடு சுற்ற ஆரம்பித்துவிடும்* என்று சொன்னார்...


 நான் குசும்புத் தனமாக *ஏங்க பெரியவரே.. மாடு சுற்றாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள்.. அப்போதும் சத்தம் கேட்குமே* என்று கேட்டேன்..


அவர் என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு *என்ன படித்திருக்கிறீர்கள்?* என்று கேட்டார்..


 நான் பெருமையாக *எம்எஸ்சி , எம்எட் எல்லாம் படித்து இருக்கிறேன்* என்று சொன்னேன்.


 அந்தப் பெரியவர் சொன்னார் *உங்களைப் போல் எல்லாம் யோசித்து ஏமாற்றக்கூடாது என்பதற்காகத் தான் என்னுடைய மாட்டை எல்லாம் நான் படிக்க வைக்கவில்லை* என்று சொன்னார். எனக்கு சவுக்குக் குச்சியால் அடி விழுந்தது போல் இருந்தது...


 *யோசித்துப் பார்த்தால் நாட்டில் நடக்கும் எல்லா திட்டமிட்ட, நுணுக்கமான திருட்டுகளுக்கும், குற்றங்களுக்கும் பின்னால் எல்லாம்  படித்தவர்களின் மூளை பயன்பட்டுக் கொண்டிருக்கிறது* என்பதை அந்தப் பெரியவர் வார்த்தைகளால் சுட்டிக்காட்டினார்...


 நேர்மை, வாய்மை, ஒழுக்கம் எல்லாவற்றையும் படித்த நாம் அதையெல்லாம் பின்பற்றி வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுந்தது...


கற்றபின் *நிற்க அதற்குத் தக* என்றார் வள்ளுவர்.. ஆனால் நாம் அதை *விற்க அதற்குத் தக* என்று மாற்றி விட்டோமே...


 உண்மைதானே....


யோசிப்போம்.,..

No comments:

Post a Comment