*தியானத்தில் வெற்றி பெற பக்தி உதவுகிறதா ? புலனடக்கம் உதவுகிறதா ?*
மலர்ந்த இதயத் தாமரையில் போய் நம் மனமானது குவிகின்ற நிலையே தியானம்.
பதில் - உண்மையான பக்தனுக்கு புலனடக்கம் தானே அமைந்து விடும். பக்தி என்பது நம் மேல் நிலை மனதை செயல்படச் செய்யும் யுக்தியே
ஆகும்.தறி கெட்டு அங்குமிங்கும் ஓடும் கீழ் நிலை மனதை தன்னை நோக்கி மேல் நிலை மனமானது ஈர்க்க வேண்டும்.
இந்த மேல் நிலை மனம்தான் இதயத் தாமரை எனப்படுகிறது. அது கீழ் நிலை மனதை ஈர்க்க வேண்டும் என்றால், கீழ் நிலை மனமானது புற விஷயங்களில் இருந்து விடுபட்டு தூய்மையடைய வேண்டும்.
அதற்குத்தான் இந்த பக்தி, பிரார்த்தனை, ஜபம், மன ஒருமைப்பாடு, பிரம்மச்சரியம் இவையெல்லாம் சாதனங்களாக அமைகின்றன.
மலர்ந்த இதயத் தாமரையில் போய் நம் மனமானது குவிகின்ற நிலையே தியானம். மாறாக மனத் தூய்மை இன்றி நாம் செய்கின்ற மன ஒருமைப்பாட்டு பயிற்சிகளெல்லாம் தியானமாகாது. அவை வெறும் தியான முயற்சிகள்.
தியானம் என்பது நம்முள் ஆன்மாவைக் காண்பது என்ற உன்னத நிலையை அடைய விரும்பும் சாதனம் மட்டுமல்ல, மன அமைதி, புத்தி கூர்மை, சமயோஜிதம், அறிவில் தெளிவு, ஞானம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பல அற்புத ஆற்றல்களையும் தரவல்லது.
பக்தி உருகுவது என்றால், தியானம் என்பது உறுதி பெறுவதாகும். பக்தி இறைவன் மேல் பற்றினை வளர்த்து இறுதியில் சூன்யத்தை(வெட்ட வெளியை) அடைவதாகும்.
தியானத்தில் பற்றுகளை அறுத்து தவத்தில் நிலைத்து வெட்ட வெளியை அடைவதாகும். பக்தியில் மனதின் செயல்பாடுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. தியானத்திலோ, கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள், அந்த கரணங்கள், புலன்கள் என்று அனைத்தும் சீரமைக்கப்படுகின்றன. எனவேதான் விரைவாக மேல் நிலையை அடைய முடிகிறது.
பொதுவாக புலன்களை அடக்குவது என்பார்கள். ஆனால், உண்மையில் அடக்குவது என்பது தவறான பதமாகும். ஒடுக்குவது என்று சொல்வதே சரியாகும். அதாவது புனிதப்படுத்துவது.
அடக்குவதற்கும் புனிதப்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குருட்டு நம்பிக்கையாலோ, பண்படாத உற்சாகத்தாலோ, கண்மூடித்தனமான வழக்கத்தாலோ பலவந்தமாக ஒன்றை வேண்டாம் என்று தள்ளுவது அடக்குவதாகும்.
அவ்வாறல்லாமல், காரணங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, மனதிலுள்ள தவறான கருத்துக்களை அகற்றுவதன் மூலமாக செய்யப்படும் மறுப்பு புனிதப்படுத்துவதாகும்.
புலன்கள் அடக்குவதால் மனிதன் சீரழிந்து போகிறான். புலன்களைப் புனிதப் படுத்துபவனே பெருவாழ்வு வாழ்வான்.
அதாவது ஒரு சாதகனின் கண்களுக்கு உலகம் துன்பங்கள் நிறைந்ததாகவே தோன்றும்.
ஏனென்றால் அவன்அறிவின் உச்சத்தில் நின்று உலகைக் கவனிக்கிறான். சக்தி மிகுந்த விவேகமான புத்தியின் பிரகாசத்தைக் கொண்டு காணும் போது நம்மை, நம் அறிவை மயக்குகிற இந்த உலகாய விஷயங்களெல்லாம் பொய்யானவை என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்கிறான்.
எனவே ஞான வீதியில் நடப்பவனுக்கு உடலை ஒடுக்கவும், புறக்கணிக்கவும், அதனின்று விலகி நிற்கவும் நிறைய சக்தி இருக்கிறது. மனதோடும், புத்தியோடும் முழுவதுமாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் அவனால் முடிகிறது.
இதையே ஒடுக்கம் என்கிறோம். இதுவே புனிதப் படுத்திக் கொள்வது. அதாவது புலன்கள் மீதான மனதின் பழைய எண்ணங்களை நீக்குவது, புதிய எண்ணங்களை சீரமைப்பது இதுவே புலனடக்கம் எனப்படுகிறது.
எனவே இரண்டுமே தியான முயற்சியில் முக்கியமான வெவ்வேறு படித்தரங்களே.
நல்ல பக்தனுக்கு மனம் தூய்மையடைந்து விடுவதால் அவன் புலன்களும் அவனுக்கு வசப்படுகின்றன.
பக்தி என்றால் உருவ வழிபாடு மட்டுமே என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.
மலர்ந்த இதயத் தாமரையில் போய் நம் மனமானது குவிகின்ற நிலையே தியானம்.
அர்த்தமுள்ள இந்து தர்மம்
*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*
No comments:
Post a Comment