Sunday, June 22, 2025

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்

கஷ்டம் கஷ்டம் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் 

தாங்க முடியலே

எதுக்குத்தான் இந்த கஷ்டம்

என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 


இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.  


பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம்

வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில்  கதை சொல்வது வழக்கம் 


அப்படி ஒரு கதைதான் இந்த பால் கதை


பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!


பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 


பசுவின் வயிற்றில் பத்திரமாய் நான் இருந்தேன். 


என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். 


அடுப்பைப் பற்றவைத்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். 


எனக்கு சூடு தாங்கவில்லை. 


துடித்துப் போனேன். 


பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்துகொண்டேன். 


பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 


நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 


இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 


அதன் பிறகு யாரும் என்னைப்பற்றி கவலைப்படவில்லை. 


திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 


எனக்கு தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.


அத்துடன் நிறுத்தினார்களா? 


என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 


நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.


என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். 


‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.


அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? 


அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். 


எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். 


உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.


 பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 


ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது.ரூபா” என்றாள். 


உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 


அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் இருநூறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.


ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். 


பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபது ரூபாதான், 


ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு இருநூறு  ரூபாயாகக் கூடிவிட்டதே! 


இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.


இதுதான் பால் கதை. 


இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?


நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்

No comments:

Post a Comment