ஒரு ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது.பக்கத்து ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனைப் புகழ்ந்து பாடி பரிசுபெற்று வரலாம் என்று அவர் எண்ணினார்.
அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது.புலவர் அவனிடம் போனார். அவனைப் புகழ்ந்து சில பாடல்கள் பாடினர்.பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இருநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் பாடினார்.
அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் உற்சாகத்துடன் பாடினார்.
அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்' என்றான். இன்னும் கொஞ்சம் பாடினார்.
அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் பாட்டை முடித்துக்கொண்டார்.
பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் கொடுத்தான். புலவருக்கு ஒன்றும் புரியவில்லை.
அவர் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே' என்றார். அதற்கு அவன் "புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய்தானே தருகிறேன் என்றேன்.
முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'எழு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன்.
நீங்கள்தான் தப்பாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள்' என்றான், புலவருக்குப் பணக்காரனின் கஞ்சத்தனம் புரிந்தது. வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்
No comments:
Post a Comment