உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப் படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக் கூடிய மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
*உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.*
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.
*ஒவ்வொரு மனிதனும்*
*தனித் தனி ஜென்மங்கள்.*
அவர்களுக்கென்று தனித் தனி ஆசா பாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்ற பின் திரும்பி வருவார்கள்.
அது வரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால் தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன் கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.
இது தான் வாழ்க்கையின் உண்மை.
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற
குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவிக் குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வது தானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.
*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அது வரை நீ பொறுமையாக இரு.
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?, தன் குணம் என்ன ?, என்பதை ஒரு நாள் வெளிப் படுத்தி விடுவார்கள்.
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ளப் பழகிக் கொள்.
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.
அதையும் மீறி சில வேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப் படுத்தி விடும்.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் , தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமானாலும் துன்பமானாலும்
அதை நீயே சந்திக்க கற்றுக் கொள்.
அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*
பெண்ணாக இருந்தாலும் , ஆணாக இருந்தாலும் , வரும் துன்பத்தை எதிர் கொள்ளக் கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*
உன் கண்ணீரும் உன் கவலையும்
உன்னை பலவீனமாக காட்டி விடும்.
அழுவதாலும் சோர்ந்து போவதாலும்
ஒன்றும் நடக்கப் போவதில்லை.
எப்படி இருந்தாலும் நீ தான் அந்த சுமையை சுமந்து ஆக வேண்டும்.
அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்து கொள்.
இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்.
🟫🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟫
No comments:
Post a Comment