Thursday, March 7, 2024

நன்றியும்,பாராட்டும்...!

ஒருவரின் நல்ல செயல்களுக்காக உண்மையாக பாராட்டி புகழும் போது, அவர் மனதில் நீங்கள் நீங்க இடம் பிடிக்கிறீர்கள்...

அழகு, அன்பு, படிப்பு, பதவி, திறமை இப்படி ஒருவரிடம் இருக்கலாம். அவைகளை அறிந்து உண்மையாக புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் புகழப்பட்டவரால் மனதில் நினைத்தை சாதித்துக் கொள்கிறீர்கள்...

குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல செயல்களைக் கண்டு அவர்களை பாராட்டிப் பாருங்கள். அவர்கள் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்...

எப்பொழுதும் தொட்டதெற்கெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக பாராட்ட நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை...

நம்மில் எத்தனை பேர் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நம் வீடு தேடி வந்து அதிகாலையில் நாளிதழ் போடுபவர்களுக்கும், துப்புறவு பணியாளர்களுக்கும், பால்காரர்களுக்கும் நன்றி கூறுகிறோம்...?

அவ்வாறு அவர்களுக்கு நன்றி கூறி அவர்ககளைப் பாராட்டும்போது, அவர்கள் எப்போதும் உங்கள் அன்புக்கு அடிமையாகிறார்கள். அதனால் இன்னும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்கள்...

‘நிறந்த நேசத்தையும், பாசத்தையும் வைத்துக் கொண்டு, வெளித் தோற்றத்திலே எரிந்து விழுந்து, அவபெயர் சம்பாதிக்கும் மக்கள் எத்தனை எத்தனை பேர்...?

நமக்கு ஏனோ பிறரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை. இந்த உலகில் எல்லோருமே பாராட்டுதலை எதிர்ப்பார்க்கின்றனர். அப்படி தங்களுக்கு பாராட்டுகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இது உங்களுக்கும், எனக்கும், ஏன் எல்லோருக்குமே பொருந்தும்...

நாம் ஒருவரை ஒரு நற்செயலுக்காக பாராட்டுவது என்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும்...

அது மட்டுமல்லாமல் அவரது அந்த நற்குணம் மேலும் செம்மையடைய உதவும். மேலும் உங்களுக்குள் இருக்கும் நட்பும், உறவும் மேலும் வலுப்பெறும். உங்களின் மீதான பிறரது மதிப்பும் மரியாதையும் உயரும்...

ஆம் நண்பர்களே...!*

பாராட்டுங்கள் - உங்களுக்கு பாராட்ட தோன்றினால்!, உடனே பாராட்டி விடுங்கள். மனதில் உள்ள அன்பை ஒளிவு மறைவில்லாமல் பாரட்டு என்ற ஊக்கியை பயன்படுத்தி வெளிக் கொணருங்கள்...!*

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப பாராட்டுவது என்பது ஒரு சிறிய செயல்தான். ஆனால்!, அது தரும் பலனோ அளவில்லாதது...!*

பாராட்டு விழுபவனை எழவைக்கும். ஆம்!, பாராட்டு என்ற சூத்திரம் உற்சாகத்தின் உறைவிடம். வெற்றிக்கான படிக்கட்டு. பாராட்டு என்பது புகழக்கூடிய வார்த்தைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை...!!*

ஒரு சிறிய புன்னகையும்கூட பிறரின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும். ஒருவரை நீங்கள் பாராட்டுவதை மற்றவர்கள் பார்க்கும்போது, உங்களிடம் இருந்து இந்த நல்ல பண்பைக் கற்றுக்கொள்வர். உங்கள் மீதும் நல்ல மதிப்பு வரும். பாராட்டு என்பது இதயங்களை வெல்லும் திறன்...!!*

பிறரை பாராட்டும்போது, அதை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மேலும் கடுமையாக உழைப்பர். நேர்மையாகச் செயல்படுவர். பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் உங்கள் வசப்படும்...!!!*

No comments:

Post a Comment